Tuesday, 30 July 2013

உத்தரகாண்டின் மௌன எச்சரிக்கை!


கடந்த இரு வாரங்களாக எல்லா ஊடகங்களையும் உத்தரகாண்டின்மழை வெள்ளமும், நிலச்சரிவும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.மலை, பள்ளத்தாக்குகளின் இடுக்குகளிலும், மரக்கிளைகளிலும், இரவா? பகலா? எதுவென்று தெரியாமல் கூட்டம் கூட்டமாக ஒதுங்கியிருந்த மக்கள் தங்களை மீட்க எப்போது, யார் வருவார்கள் என்று காலத்தைக் கழித்த கொடுமையான தருணங்களை எல்லா ஊடகங்களும் ஒளிபரப்பு செய்தன. ஏறத்தாழ 1500 கி.மீ. சாலைகளைக் காணவில்லை. 104 பாலங்கள் உருக்குலைந்து போய்விட்டன. 2000 கட்டிடங்கள் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. 700க்கும் மேற்பட்ட கிராமங்கள் ஜலசமாதி அடைந்துவிட்டன. இறந்தவர்கள் 15,000 பேர்களா? அதற்கும் மேலா? முற்ஷூலும் தெரியவில்லை. ஆற்றின் குறுக்கேயும், ஓரமாகவும் ஏராளமான கட்டுமானங்களை உருவாக்கியவர்களுக்குத் தெரியாது இப்படி ஒரு மழையும், மலைச்சுனாமியும் வருமென்று. உண்மையில் உத்தரகாண்டில் பூகோள ரீதியாக இப்படி ஒரு மழை பொழிவதற்கு வாய்ப்பு இல்லை. கடந்த 300 ஆண்டுகளாக எந்த மழை வெள்ளத்தாலும் அடித்துச் செல்லப்படாத ஆதிசங்கரர் சமாதி இப்போது இல்லை என்பதே அதற்கு சாட்சி. இதற்கு மழை மட்டுமே காரணமில்லை. கேதர்நாத்தின் மூன்று பக்கங்களில் மேற்குப்புறம் இருந்த கேதர்டோம் என்கிற பனிச்சிகரம் உடைந்து அருகிலிருந்த சர்பால் ஏரியில் மூழ்கியிருக்கிறது. இப்போது வாய் திறக்கும் இஸ்ரோவும் சரி, உத்தரகாண்ட் மாநில வானிலை மையமும் சரி எந்தவித எச்சரிக்கையையும் விடுக்காது போகவே, கேதர்டோம் பனிச்சிகரம் மெள்ள உருகி தண்ணீரின் மட்டம் உயர்ந்தது. அதனால் அழுத்தம் உண்டாகி, சர்பால் ஏரியை உடைத்து, அதை ஒட்டிய மந்தாகினி ஆற்றில் பேரலைகளை உருவாக்கியதாலேயே கடும் வெள்ளப் பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டிருக்கிறது.இதெல்லாம் ஓரிரு நாட்களில் நடந்து விடவில்லை. ஏறத்தாழ 20 ஆண்டுகளில் நடந்திருக்கிறது. (ஆனால், வெள்ளப்பெருக்கு ஒரே நாளில் ஏற்பட்டிருக்கிறது). இந்த பேரழிவிற்கு தாரிதேவி சிலையை இடம் மாற்றியதே காரணம் என ஒரு பத்திரிகை தலையங்கமே தீட்டியிருந்தது. கேதர்நாத் வெள்ளப்பெருக்கிற்கு இயற்கையும், தாரிதேவியும் ஒருபோதும் காரணமில்லை. கேதர்டோம் பனிச்சிகரம் உருகி ஏன் சர்பால் ஆற்றில் விழுந்தது? இமயமலையில் ஓடும் கங்கா, யமுனா ஆற்றின் துணை ஆறுகளான மந்தாகினி, அலர்நந்தா, பாகீரதி போன்ற துணை ஆறுகளின் போக்கை மாற்றி அங்கு நீர்மின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்காக 20 கி.மீ. தூரத்திற்கு சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.20 ஆண்டுகளாக தொடர்ந்து நதிகளின் போக்கு மாற்றப்பட்டதால் குறிப்பிட்ட மலைச்சிகரத்தின் சீதோஷ்ணநிலை மாறுபட்டு பனிச்சிகரம் உடைந்து விழுந்திருக்கிறது. மலைப் பாங்கான இடங்களில் கட்டுமானங்களை மேற்கொள்ளக் கூடாது என்பதும், அணைக்கட்டு போன்ற நீர்நிலைகளையும் உருவாக்கக் கூடாது என்பதும் விதி. இமயமலை செல்லும் யாத்திரீகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே, ஏராளமான கட்டுமானங்களும், நீர்மின் திட்டங்களும் இயற்கைக்கு முரணாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. கட்டிடங்கள் யாவும் அஸ்திவார பலம் இழந்து ஆற்றில் சரிகிறது என்றால், அதற்கு இயற்கையா காரணம்? ஆற்றங்கரை ஓரத்தில் எந்த ஒரு விதியையும் பின்பற்றாமல் 7 மாடி கட்டிடங்களைக் கட்டுகிற பேராசைதானே காரணம்? இந்த இயற்கை பேரிடர் வெறும் நிகழ்வு அல்ல. இது ஒரு முக்கிய அறிவிப்பு. நீலகிரி, கொடைக்கானல்,ஏற்காடு போன்ற மலை வாசஸ்தலங்களுக்கு உத்தரகாண்டின் ருத்ரதாண்டவம் ஒரு மௌன எச்சரிக்கை. அந்த எச்சரிக்கைக்கு நாம் பயந்தே ஆக வேண்டும். E.உதயகுமார் நிர்வாகஇயக்குனர்

வேண்டாம் ஐ.பி.எல்.போதை!


தற்போதைய சீன பிரதமர் லீகியாங்கின் இந்திய வருகையின்போது தனியார் டிவி நிருபர் ஒருவர் சம்பந்தமில்லாத ஒரு கேள்வியை அவரிடம் கேட்டார். “சீனாவில் இனியாவது கிரிக்கெட் விளையாடப்படுமா?” என்பதுதான் அது. அதற்கு லீகியாங் சொன்ன பதில் “ஒரு போதும் இல்லை. நாங்கள் ஒரு நாளில் சிறு பகுதியைத்தான் விளையாட்டிற்கென எடுத்துக் கொள்வோமே தவிர, ஒரு நாளையே விளையாட்டிற்காக எடுத்துக் கொள்வதில்லை. அதுவும், இங்கு மாதக் கணக்குகளில் கிரிக்கெட் ஆடுவதையும், அதற்காக கோடிக்கணக்கான இளைஞர்கள் தங்கள் நேரத்தை அர்ப்பணிப்பதையும் பார்த்தால் எனக்கு ஆச்சரியமும், பரிதாபமும்தான் ஏற்படுகிறது” என்றார். சீனாவிற்கும், இந்தியாவிற்கும் உள்ள பொருளாதார வளர்ச்சி விகிதத்தைக் கணக்கிட்டால், நம்மால் சீனாவை எட்டிப் பிடிக்க முடியாது என்கிறார்கள். ஒரு வேளை சீனப் பிரதமர் லீகியாங் போன்ற தெளிவான சிந்தனை உடைய சீனத் தலைவர்கள் அதற்குக் காரணமாக இருக்கலாம். சிக்ஸர்களுக்காக எழுந்த இந்திய இளைஞர்களின் கைத்தட்டல்களில் லீகியாங் சொன்ன பதில் ஒருவேளை இந்திய ஊடகங்களில் அமிழ்ந்து போயிருக்கலாம். ஆனால், ஐ.பி.எல் ன் நிஜம் அவ்வப்போது வெளிவந்து கொண்டுதான் இருக்கிறது. ஐ.பி.எல். தொடரைப் பொறுத்தவரை, கலாச்சார சீரழிவு, ஆபாச நடனம், மேட்ச் ஃபிக்ஸிங், ஸ்பாட் ஃபிக்ஸிங் போன்ற அப்பட்டமான விளைவுகளை மட்டுமே நாம் அறிகிறோம். ஐ.பி.எல். தொடர் ஏற்படுத்தும் மறைமுக எதிர்வினைகள் பற்றி நாம் பெரும்பாலும் அறிந்திருப்பதில்லை. ஐ.பி.எல். தொடர் நடைபெறும் இந்த இருமாத காலங்களில் ஈயடிக்கும் வணிகத்துறைகள் ஏராளம். திரையரங்குகள், வணிக வளாகங்கள், கண்காட்சிகள், தீம் பார்க்குகள், நூலகங்கள், அறிவியல் கருத்தரங்குகள் போன்ற எல்லா துறைகளுமே நலிந்து விடுகின்றன. கோடைக்கால விடுமுறையை மாணவர்களை பயனுள்ள வகையில் கழிக்க விடாமல் செய்யும் இந்த ஐ.பி.எல். தொடர் இந்தியாவிலுள்ள கோடிக்கணக்கான இளைஞர்களின் ஆக்கபூர்வமான நேரத்தையும் எடுத்துக் கொள்கிறது. பின்னிரவு வரை நடைபெறும் ஆட்டத்தால் மக்களின் மறுநாளைய பணிகள் சீர் குலைகின்றன. சேலத்தில் ஐ.பி.எல். மேட்சைப் பார்க்க கணவனுக்கும், மெகா சீரியலைப் பார்க்க விரும்பிய மனைவிக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் விரக்தி அடைந்த மனைவி மண்ணெண்ணையை ஊற்றி கொண்டு தீக்குளித்து இறந்து போன செய்தி கூட யாருக்கும் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஒரு சில தனியார் அமைப்புகள் கோடி கோடியாக கொள்ளையடிப்பதற்காக, ஒட்டுமொத்த நாட்டு மக்களையே ஆண்டுதோறும் இரு மாத காலம் ஐ.பி.எல். லுக்கு அடிமையாக்கி சுரண்டுவது அதர்மம் மட்டுமல்ல, சட்டவிரோதமானதும் கூட. சினிமா மற்றும் டாஸ்மாக் போதையில் அகப்படாதிருந்த வெகு சில இளைஞர்கள் கூட இந்த ஐ.பி.எல். போதைக்குள் அகப்பட்டுக்கொண்டிருப்பது நிச்சயம் நாட்டுக்கு நல்லதல்ல. சுவாமி விவேகானந்தரும், டாக்டர் அப்துல்கலாமும் பெருமதிப்பு வைத்திருக்கிற இந்திய இளைஞர்களை குட்டிச்சுவராக்கும் எந்த போதையையும், அது கிரிக்கெட்டாக இருந்தாலும் நாம் அனுமதிக்கக்கூடாது. E.உதயகுமார் நிர்வாகஇயக்குனர்

தாய்மை கலந்த கடமை!


நுண்ணறிவு,நேர்மை, வீரம், அர்ப்பணிப்பு, சமயோசிதம், செயலாற்றும் திறன், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, இவையெல்லாம் காவல் துறையினருக்கு அவசியம் தேவை எனச் சொன்ன அஷூஞர் அண்ணா சொல்லாமல் விடுத்த காவல்துறைக்குத் தேவையான இன்னொரு குணம் தாய்மை. தாய்மைக்கும், கடமைக்கும் என்ன தொடர்பு என கேள்வி கேட்பவர்கள் கீழ்க்கண்ட மூன்று செய்திகளைப் பற்றி படித்தால் நிச்சயம் புரியும். செய்தி ஒன்று: சீனாவில் பூகம்ப பேரிடர் மீட்புப் பணிக்காக ஜியாங் என்ற ஒரு பெண் போலீஸ் அதிகாரியை அனுப்பியிருந்தது அரசு. பிறந்து 6 மாதமே ஆன தனது குழந்தையை வீட்டிலேயே விட்டுவிட்டு பயணமானார் ஜியாங். குழந்தையை விட்டுவிட்டு வந்தாலும், அந்தப் பெண் போலீசின் தாய்மை மட்டும் மாறவில்லை. அங்கு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த எட்டு குழந்தைகளுக்கும் தனது தாய்ப்பால் கொடுத்து காப்பாற்றியிருக்கிறார் ஜியாங். தாய்மை நிறைந்த அந்த பெண் போலீஸ் அதிகாரியை அனைவரும் ‘போலீஸ் அம்மா’ என்று அழைக்கிறார்களாம். செய்தி இரண்டு: இது நடந்தது சென்னையில். மனநிலை சரியில்லாத தனது 20 வயது பெண்ணை அழைத்துக்கொண்டு தலைமைச் செயலகத்திற்கு மனு கொடுக்க வந்திருக்கிறார் ஒரு தாய். அங்கு ஓரிடத்தில் தனது பெண்ணை உட்கார வைத்துவிட்டு, மனு கொடுத்துவிட்டு திரும்புவதற்குள் மனநிலை சரியில்லாத அந்தப் பெண் தனக்கு அருகிலிருந்த பெண் போலீசை தாக்கி விட்டார். இந்த விவரம் தெரிந்து அந்த தாய் பெண் போலீசிடம் மன்னிப்புக் கேட்டதற்கு, அந்தப் பெண் போலீஸ் ‘பரவாயில்லை விடுங்கள், அவர்கள் குழந்தை மாதிரிதானே’ எனப் பெருந்தன்மையோடு அந்தப் பெண் மீது இரக்கம் காட்டியிருக்கிறார். காக்கிச் சட்டைக்குள்ளும் இருக்கும் தாய்மை நிறைந்த இந்த இரு இதயங்களைப் பற்ஷூய செய்திகளைப் படித்தீர்கள் அல்லவா? இனி, 3 வது செய்தி. இது நடந்தது தலைநகருக்கெல்லாம் தலைநகர் டெல்லியில். ஐந்து வயது பெண் குழந்தையை பலாத்காரப்படுத்திய கொடூர குற்றவாளிகளைக் கைது செய்யவும், பாதிக்கப்பட்ட குழந்தைக்கு உரிய நிவாரணமும், நீதி வழங்கவும், ஆயிரக்கணக்கான பெண்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். அவர்களில் ஒரு பெண்ணை துணை கமிக்ஷனர் ஒருவர் கன்னத்தில் அறைந்து வெளியே செல்லும்படி துரத்தியிருக்கிறார். ஒரு குற்றமும் செய்யாத, ஒரு தவறும் செய்யாத, கைகளில் எவ்வித ஆயுதமுமின்றி , யாரோ ஒரு முகம் தெரியாத பெண் குழந்தைக்காக நீதி கேட்கச் சென்று முற்றுகையிட்ட ஒரு இளம் பெண்னை கன்னங்களில் மாறி மாறி அறைந்த அந்த உதவி கமிக்ஷனர் போன்ற இரக்கமற்றவர்களும் காவல்துறையில் உள்ளனர். காக்கிச்சட்டை என்பது தனது வலுவினையும், அதிகாரத்தையும், பொதுமக்கள் மீது பிரயோகிப்பதுதான் என நினைத்துக் கொள்ளும் பல ஆயிரம் போலீசார் நம் நாட்டில் இன்னும் பணிபுரிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் குறைந்தபட்சம் சீனப் பெண் போலீஸ் ஜியாங்கியிட மிருந்தோ அல்லது சென்னை பெண் போலீசிடமிருந்தோ தாய்மை கலந்த கடமையைக் கற்றுக் கொள்ளலாம். ஏனெனில், தாய்மை என்பது பெண்களுக்கு மட்டுமே உரித்தானது அல்ல. சில சமயம் ஆண்களுக்கும் அது தேவையானதுதான். E.உதயகுமார் நிர்வாக இயக்குனர்