Wednesday, 20 February 2013

'லா'வை மீறும் சவுதாலாக்கள்! பிப்ரவரி-2013


ஒரே வீட்டில் தந்தையும்,மகனும் சிறைக்குச் செல்வது என்பது நமது பாரதத்திற்குப் புதிதல்ல.நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு அப்படித்தான் சிறைக்குச் சென்றார்கள்.அதையும் பெருமையாகக் கருதினார்கள்.அது இந்தியா சுதந்திரம் அடைவதற்கான போராட்டம்.ஆனால்,இன்றும் அப்படி சிறைக்குச் செல்ல துவங்கி இருக்கிறார்கள்.நாட்டு மக்களுக்காக அல்ல;வீட்டு மக்களுக்காக. அரசியல்வாதிகள் ஊழல் செய்வதும்,அது பற்றிய செய்திகள் நாளிதழ்களில் வெளியாவதும்,பின்பு அதை மறந்துவிட்டு வேறு பரபரப்பான செய்திகளுக்குத் தாவுவதும் நமக்கு வாடிக்கையான ஒன்றாகும்.அந்த வரிசையில் இது ஒரு புதிய செய்தி.ஒரு மாஜி முதல்வரின் ஊழல் குற்றம் நிரூபிக்கப்பட்டு,தண்டனையும் கொடுக்கப்பட்டுள்ளது.சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் ஒரு மாஜி முதல்வருக்கு தண்டனை வழங்கப்பட்டிருப்பது என்பது இதுதான் முதல்முறை என்கிறார்கள். ஹரியானா மாநிலத்தில் 1999-2000-வது ஆண்டில் தனக்கு வேண்டியவர்களையும்,லஞ்சம் வாங்கியவர்களையும் ஆசிரியர்களாக நியமனம் செய்ததாக இந்திய தேசிய லோக்தள் கட்சியின் தலைவரும்,ஹரியானா மாநிலத்தின் அப்போதைய முதல்வருமான ஓம் பிரகாஷ் சவுதாலா மீது குற்றம் சாட்டப்பட்டது.குற்றம் நடந்து 13 ஆண்டுகள் கழித்து தண்டனை அறிவிப்பு வெளியாகி உள்ளது.ஆயுள் தண்டனைக்கே அசராத நமது அரசியல்வாதிகளுக்கு,10 ஆண்டு கால சிறை என்பது பக்கத்து நாட்டுக்கு சுற்றுலா செல்வது போலாகும்.இது சவுதாலாவுக்கு மட்டுமல்ல,மக்களுக்கும் நன்கு தெரியும்.பெரும் பணம் செலவழித்து ஆட்சியை பிடிப்பது,ஆட்சிக்கு வந்தவுடன் பன்மடங்கு பணத்தை சுருட்டுவது போன்ற அரசியல்வாதிகளுக்கு பல ஆண்டுகள் கழித்து குறைவான தண்டனை வழங்குவது என்பது நம் வீட்டுக் குழந்தையை மயிலிறகால் அடிப்பது போன்ற எண்ணத்தையே நமக்கு தருகிறது. தாமதமாக வழங்கப்பட்டிருக்கின்ற மற்றும் குற்றத்தின் தன்மைக்கு குறைவாக வழங்கப்பட்டிருக்கின்ற தீர்ப்பு என்ற போதிலும்,ஒரு ஊழல் அரசியல்வாதிக்கு,அதுவும் ஒரு முன்னாள் முதல்வருக்கு வழங்கப்பட்ட முதல் தீர்ப்பு என்பதால் இதை கைதட்டி வரவேற்றுதான் ஆக வேண்டும். போலி நிதி நிறுவனங்கள்,மல்டி-லெவல் வியாபாரங்கள்.தேக்கு மர வளர்ப்பு,ஈமு கோழி வளர்ப்பு என்ற பெயரில் மக்கள் பணத்தை சுருட்டும்'டை'கட்டிய கிரிமினல் பேர்வழிகளுக்கும்,சவுதாலா போன்ற ஊழல்வாதிகளுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக நாம் உணரவில்லை. இந்த முறைகேடுகள் ஹரியானா மாநிலத்தில் மட்டுமல்ல,இந்தியா முழுவதும் பரவியுள்ளது.மாஜிக்களுக்கும்,ஆட்சியாளர்களுக்கும் இது ஒரு எச்சரிக்கை மணியாகும்.ஓம் பிரகாஷ்,அஜய் சிங் சவுதாலாக்கள் போல 'லா'வை மீறும் சவுதாலாக்கள் நாடு முழுவதும் கண்டறியப்பட்டு,விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு காலம் தாழ்த்தாது உடனே கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். தந்தை,மகன் இருவர் மட்டுமல்ல;இன்னும் கொஞ்சம் கிளறிப் பார்த்தால் நாடு முழுக்க நிறைய ஊழல் குடும்பங்கள் சிறைக்குச் செல்ல வேண்டியிருக்கும்.சவுதாலா குடும்பம் ஒரு தொடக்கமே.அதைத் தொடர்ந்து பல்வேறு ஊழல் குடும்பங்களின் சிறையை நோக்கிய அணிவகுப்பைப் பார்க்க யாருக்குத்தான் ஆசையிருக்காது? காத்திருப்போம்! E.உதயகுமார் நிர்வாக ஆசிரியர்

0 comments:

Post a Comment