Wednesday, 20 February 2013

ஊழல்வாதிகளின் பணம் காய்ச்சி மரம்-அக்டோபர்-2012


உலக மக்களில் மொத்தமே இருபிரிவுகள் தான்.ஒரு பிரிவு.அதிகாரம் செய்பவர்கள்.இன்னொரு பிரிவு அதிகாரத்திற்கு ஆட்படுபவர்கள்.'அதிகாரத்தைச் செலுத்துபவர்கள்'என்ற பிரிவில் நுழைந்து எளிய மக்களை ஆட்டிப் படைக்கும் சக்திகள் எல்லாக் காலகட்டங்களிலுமே இருந்து கொண்டே தான் வருகின்றனர்.மன்னராட்சி,அன்னியர் ஆட்சி,மன்னராட்சியை விட மோசமானதோ இந்தக் குடியாட்சி? என்று நம்மை எண்ணவும் செய்கிறது.அஜாக்கிரதையாலும்,முன் யோசனை இல்லாத திட்டங்களினாலும் ஏற்படக்கூடிய பல்வேறு வகையான வருமான இழப்புகளுக்கு அதிகாரத்திற்கு அடிபணியக்கூடிய எளிய மக்கள் தான் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. அண்மையில்,மத்திய அரசால் விதிக்கப்பட்ட டீசல் விலைஉயர்வு,மானிய விலை சமையல் காஸ் சிலிண்டர் குறைப்பு.சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்தல் முதலானவற்றுக்காக,எப்பொழுதுமே பேசாத பிரதமர் மன்மோகன் சிங்,தொலைகாட்சியில் 15 நிமிடம் பேசியிருக்கிறார்.விலை உயர்வுக்கும்,அன்னிய நேரடி முதலீட்டிற்கும் சப்பைக் கட்டு கட்டிய பிரதமர் மறந்தும் கூட,அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பான ஸ்பெக்ட்ரம் 2G ஊழல் ரூ.1.76,000 கோடி பற்றியோ,122 நிலக்கரி சுரங்கங்களை முறைகேடாக ஒதுக்கீடு செய்ததினால் ஏற்பட்ட இழப்பு ரூ.1,86,000 கோடி பற்றியோ,வெடிக்கக் காத்திருக்கும் அடுத்த ஊழலான ரூபாய் ஆறு இலட்சம் கோடி மதிப்பிலான விண்வெளி ஸ்பெக்ட்ரம் பற்றியோ, வாயைத் திறக்கவில்லை.இந்தப் பணமெல்லாம் ஒழுங்காக வசூலிக்கப்பட்டு,ஊழல் அரசியல்வாதிகளின் முழு கருப்புப் பணத்தையும் வெளிக்கொணர்ந்தால்,பெட்ரோல் விலை லிட்டருக்கு.ரூ.10 ஆகவும்,வருடத்திற்கு 25 காஸ் சிலிண்டரும் கிடைக்கும்.பொருளாதார மேதையான பிரதமருக்கு இது தெரியாமலா இருக்கும்? எளிய மக்களை நசுக்காமல் எவ்வாறு நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவேண்டும் என்கிற எவ்விதமான ஆக்கபூர்வமான திட்டங்களும் இல்லாத,தனது கட்சியிலும்,கூட்டணிக் கட்சிகளிலும் உள்ள ஊழல் பேர்வழிகளைக் கட்டுப்படுத்த இயலாத நமது பிரதமர்,ஒரு புதிய விஷயத்தை நமக்கு சொல்ல முன்வந்திருக்கிறார்.பணம் மரத்தில் காய்ப்பதில்லையாம்.அதனால்,நாம் இந்த நெருக்கடியை ஏற்றுக் கொண்டுதான் தீர வேண்டுமாம். ஆனால்,உண்மை என்ன தெரியுமா?பணம் மரத்தில் தான் காய்க்கிறது.அந்த மரத்தின் பெயர் 'இந்தியா'. அந்த மரத்தை விதைத்து,வளர்த்து,பராமரித்து வருவது,எந்தவித அதிகாரமும் இல்லாத எளிய இந்திய மக்கள் தான்.அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு அந்த மரத்தில் காய்க்கும் பணத்தை அறுவடை செய்யும் வித்தை நன்றாகத் தெரிந்திருக்கிறது,அதை பதுக்கவும் தெரிந்திருக்கிறது. வெகு நாட்களுக்கு முன் ஒரு தமிழகத் தலைவருக்கு பிரதமர் பதவி தேடி வந்தபோது அதை மறுத்து அவர் சொன்ன வார்த்தை:''நாட்டின் பிரதமர் என்பவர் வெறுமனே நாட்டின் அன்றாட நிர்வாகத்தை பார்த்துக் கொள்பவர் அல்லர்.பிரதமராக வருபவருக்கு ஆழ்ந்த பொருளாதார அறிவு,தொலைநோக்குப் பார்வை,உலகம் எந்த திசையில் போய்க்கொண்டிருக்கிறது?அதில் இந்தியாவை எப்படி வழி நடத்த வேண்டும்?போன்ற சிந்தனைகள் வேண்டும்.என்னால் அது முடியாது.ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பதவி வருகிறது என்றால் அதில் போய் நாம் ஒட்டிக் கொண்டுவிடுவதா?பதவியை விட தேசம் பெரிது அல்லவா?''இப்படி சொன்னவர் ஜி.கே.மூப்பனார்.ஆனால்,அதற்குப் பின் வந்த எந்தப் பிரதமருக்கும் மூப்பனாரின் தெளிவு இருந்ததாக நாம் அறியவில்லை. E.உதயகுமார் நிர்வாக ஆசிரியர்

0 comments:

Post a Comment