Wednesday, 20 February 2013

ஹாரி பாட்டரும் ஆற்று மணலும்-மார்ச்-2011


எனது நண்பர் அப்போதுதான் இலண்டனிலிருந்து வந்திருந்தார்.நேரில் சென்று பார்த்த போது,கையில் ஏகப்பட்ட பரிசுப் பொருட்கள்.சென்ட் பாட்டில்,செல்போன்,லேப்டாப்,லெதர் ஜாக்கெட், ஹாரிபாட்டர் புத்தகம் இன்னும் நிறைய.. 'இந்தா,இது புதுசா குழந்தைகளுக்கான மாயாஜால புத்தகம்.உனது மகளுக்கு எனது பரிசாக கொடு' என்று ஹாரிபாட்டர் புத்தகத்தை கொடுத்தார்.''இது சென்ற வாரம் இங்கிலாந்தில் ரிலீஸ் ஆன புதிய பதிப்பு.விலை 8 பவுண்டுகள்''என்றார் என் நண்பர். ''இது சென்னையிலே கிடைக்கிறதே! நேற்றே இதை வாங்கி விட்டேன். விலையும் கிட்டத்தட்ட இதேதான்'' என்றேன். ''அப்போ,இந்த செல்போன்,லேப்டாப்?'' ''இவை எல்லாமே இதே விலையில் இந்தியாவில் கிடைக்கிறது.'' இந்தியாவில் அதிகம் கிடைக்காத பொருட்களை குறைந்த விலைக்கு வாங்கி வந்து,குடும்பத்தினரையும்,நண்பர்களையும் அசத்த நினைத்திருந்த அவருக்குக் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. ''உலகம் சுருங்கிவிட்டது நண்பா.உலகின் ஏதோ ஒரு மூலையில் ரிலீஸ் ஆகும் சினிமா,லேட்டஸ்ட் மாடல் செல்போன்,எல்.சி.டி.டிவி.என எல்லாப் பொருட்களுமே உலகின் எல்லாப் பகுதிகளிலும் கிட்டத்தட்ட அதே விலையில் கிடைத்துவிடும்.இதைத்தான் உலகமயமாக்கல் என்கிறோம்.அடுத்த தடவை இங்கிலாந்திலிருந்து வரும் போது,சச்சினின் மெழுகு பொம்மைக்குப் பக்கத்தில் நின்று போட்டோ எடுத்துவா. அது போதும் என்றேன் சிரித்தபடி. இரண்டு நாட்கள் கழித்து அதே நண்பரிடம் இருந்து போன்.''உலகமயமாக்கல் குறித்து விளக்கம் சொன்னாயே,சென்னையில் ஒரு யூனிட் ஆற்று மணல் விலை என்ன?''என்று கேட்டார். கட்டுமானத்துறை பத்திரிகை ஆசிரியரான எனக்குத் தெரியாதா? ''ரூ.3,700''என்றேன். ''திருச்சியில் என்ன விலை?'' தயங்கியபடி ''ரூ.1,150''என்றேன். ''மதுரையில் ஒரு யூனிட் ஆற்று மணல்?'' ''ரூ.7,000''என்றேன் முகம் வியர்த்தது. ''ஐயாயிரம் கி.மீ.தொலைவில் கிடைக்கும் ஹாரிபாட்டர் புத்தகம் உங்களுக்கு அதே விலையில் கிடைக்கிறது. ஆனால்,சில நூறு கி.மீ தொலைவில் கிடைக்கும் ஆற்று மணல் 6 மடங்கு விலை வித்தியாசத்தில் விற்கப்படுகிறது.இதுதான் உலகமயமாக்கலா? தாராளமயமாக்கலா? 'அது வந்து.தாமிரபரணியில் மண் எடுக்கத்தடை.மணல் குவாரிகள் மூழ்கிவிட்டன.அதனால்தான் மதுரையில் மட்டும்..''என நமது கட்டுமானத்துறையில் ஏற்படுகின்ற விசித்திரமான குழப்பங்களுக்கு விளக்கம் சொல்ல நான் முற்பட்டேன்.ஆனால் எதிர்முனையில் போன் எப்போதோ வைக்கப்பட்டிருந்தது. E.உதயகுமார் நிர்வாக ஆசிரியர்

0 comments:

Post a Comment