Wednesday, 20 February 2013

ஐந்து நிமிடம் ஒதுக்குங்களேன் -ஏப்ரல்-2011


நெருங்கிய உறவினர் அவர்.எந்த நேரமும் பிஸியான அவரை எதிர்பாராமல் சந்தித்தேன்.நிறைய விஷயங்கள் பேசிவிட்டு ,;;வீட்டில் உள்ள லைப்ரரி புத்தகங்களை அகர வரிசைப்படி அடுக்க வேண்டும் என்று ரொம்ப நாளாக சொல்லிக் கொண்டிருந்தீர்களே செய்தாகி விட்டதா'' என்று கேட்டேன்.''இல்லை இல்லை.வருகிற விடுமுறை நாளில் தான் அதை திட்டமிட்டிருக்கிறேன்''என்றார். ''மனை ஒன்று சீப்பாக வருகிறது என்றீர்களே! போய்ப் பார்த்தாகிவிட்டதா?''என்றேன்.''அதையும் அன்றுதான் செய்யவேண்டும்.அது மட்டுமல்ல,போர்டிகோவை காலி செய்து வேண்டாத பொருட்களை வெளியே தூக்கிப் போடவேண்டும்.தோட்டத்தில் உள்ள புதர்களையும் வெட்ட வேண்டி இருக்கிறது.நிறைய வேலைகளை செய்ய அன்று திட்டமிட்டிருக்கிறேன்.முடிந்தால்,வெகு நாட்களாக பார்க்காமல் இருந்த உறவினர்களையும்,நண்பர்களையும் நேரில் சென்று பார்க்க இருக்கிறேன்.ஏனெனில்,அவர்கள் பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமைகளில் இருப்பதில்லை'' என்றார். '' ஞாயிற்றுக்கிழமை இல்லையா?பின்னர் விடுமுறை தினம் என நீங்கள் கூறியது என்று?'' ''அதான் தேர்தல் நாள் ஏப்ரல் 13.அன்றுதான் சொன்னேன்'' ''தேர்தல் நாள் விடுமுறை நாளா? '' ''ஆம்.அன்று விடுமுறைதானே? அன்று மதியத்திற்குள் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டால், மதியத்திற்கு மேல் செம்மொழிப் பூங்கா,மாலை சத்யம் தியேட்டர்''என சொல்லிக்கொண்டே போனார். ''தேர்தல் அன்று நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றி சொன்னீர்களே,அதே நாளில் முக்கிய வேலையான ஓட்டுப் பதிவினை எப்போது செய்வீர்கள்?''என்றேன். ''ஓட்டா?நானா?குடும்பத்தோடு கியூவில் நிற்பதா?''என சிரித்தார்.''கிடைக்கும் நேரத்தை எப்படி முழுமையாக பயன்படுத்துவது என யோசிப்பதுதான் புத்திசாலித்தனம்''என தத்துவம் பேசினார். ''வாக்களிக்கும் நேரத்தை வீணாகும் நேரம் என்றா சொல்கிறீர்கள்.வாக்களிக்க ஐந்து நிமிடம் ஒதுக்க முடியாத மனப்பான்மை கொண்ட உங்களைப் போன்ற பலரால்தான் நிறைய ஐந்து,ஐந்து ஆண்டுகள் நமது மாநிலத்திற்கும்,நாட்டிற்கும் வீணாகிப் போய்விட்டன.95% மதிப்பெண் எடுத்தால் கூட நமது பிள்ளைகளை முட்டாள் என்று தான் திட்டுகிறோம்.100% ஆசைப்படுகிறோம்.ஆனால்,பெரும்பாலும் நமது நாட்டின் வாக்குப் பதிவு 60% தாண்டவில்லை. ஒரு சட்டையை வாங்குவது என்றாலும்,பேனா புத்தகம் வாங்குவது என்றாலும்,வீட்டிற்கு மிதியடி வாங்குவது என்றாலும் நாம் கடைக்குச் சென்றவுடன் வாங்குவதில்லை.சில நிமிடங்களாவது காத்திருக்கிறோம் ஆனால்,நமது நாட்டின் அடுத்த 5 ஆண்டுகள் நம்மை வழிநடத்தப் போகும் அரசியல் தலைமையை தேர்ந்தெடுக்க நம்மால் 5 நிமிடங்கள் கூட ஒதுக்க முடியாதா?நினைவில் கொள்ளுங்கள்.வாக்குரிமை இருந்தும் வாக்களிக்காத அனைத்து மக்களுமே சொந்த நாட்டு அகதிகள் தான்'' என்றேன். எதையோ யோசித்து''சென்று வருகிறேன்''என்று கிளம்பியவரிடம்,அவசரப்படாதீர்கள் தேர்தல் ஏப்ரல் 13 அன்றுதான்''என்றேன் . ''அதில்லை வாக்காளர் பட்டியலில் எனது பெயர் இருக்கிறதா என்று முதலில் பார்க்க வேண்டும்''என்று கிளம்பிவிட்டார் உறவினர். E.உதயகுமார் நிர்வாக ஆசிரியர்

0 comments:

Post a Comment