Wednesday, 20 February 2013

மழையின் உத்தரவு!டிசம்பர்-2011


சனி நீராடு!அட ஒளவையே,இங்கு நீரல்லவா எங்களை நீராடி விட்டது! -ஏதோ ஒரு கவிஞனின் இந்த வரிகளை எங்கோ,எப்போதோ படித்தாற்போல் ஞாபகம்,ஆனால் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டின் மழைக்காலங்களில் தப்பாது நினைவுக்கு வருகிறது. மழை என்கிற விஷயம் நமக்கு எப்போதும் ரசிப்புக்குரியதாக இருந்தது கிடையாது.நன்றாக குலுக்கி திறக்கப்பட்ட பாட்டில் சோடாவைப் போல தங்காமல் சென்றுவிடுகிறது மழை வெள்ளம். தமிழ்நாடு என்கிற ஒரு மொத்த அந்த மாநிலத்தையே மழை வெள்ளம் தனித்தனி தீவுகளாக்கிவிட்டது.தமிழகத்தின் எந்த ஒரு மூலையிலிருந்தும் இன்னொரு மூலைக்கு நீங்கள் கைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.வாழ்க தொழிற்நுட்பம்!.ஆனால்,உங்கள் தெருவிலிருந்து பக்கத்துக்கு தெருவில் இருக்கும் நபரை நேரில் சென்று சந்திப்பதற்கு பாதை இல்லை.வீட்டில் பரண்கள் வரை தண்ணீர் நிரம்பி விட்டது.ஆனால் நிரம்ப வேண்டிய கோயில் குளங்கள் இன்னும் வெறுமையாகவே இருக்கின்றன.இந்த அதிசயமான முரண்கள் நம் நாட்டில் மட்டுமே சாத்தியம். யானைகள் வரும் பாதையிலும்,ஆறுகள் செல்லும் பாதையிலும் வீடுகளை உருவாக்குவது நமக்கு கை வந்த கலை,அதனால்தான் களிறும் சரி காட்டாறும் சரி நம் இல்லங்களை துவம்சம் செய்து விடுகின்றன. ஒரு மிகப்பெரிய அழிவுகளுக்கு பேதமில்லை.அது உலகின் எங்கும்,எப்போதும்,எவர் ஆட்சியிலும் வந்தே தீரும்.அண்மைக்கால சுனாமியில் அகப்பட்ட ஜப்பானியர்களால் எல்லாவற்றையும் மீண்டும் சரிகட்ட ஆறு வாரங்கள் போதுமானதாக இருந்தது.ஆனால் இரண்டு மூன்று நாட்கள் மட்டுமே பருவமழை பதம் பார்த்த தமிழ்நாட்டில் நகரங்கள்,கிராமங்கள்,மீண்டும் சரியாக பலமாதங்கள் ஆகும் என்கிறார்கள். ஜப்பானுக்கு மட்டும் ஏன் சுனாமியும் சிறுமழையாகிறது?நமக்கு மட்டும் ஏன் மழையும் சுனாமியாகிறது,?நிதி பற்றாக்குறை,தொழில்நுட்பம் குறைவு.மனித சக்தி குறைவு என்று வேற்று வாக்கியங்களை இதற்கு பதிலாக சொல்ல முடியாது. மனிதனின் வாழ்வாதாரத்திற்கு பயன்படாமல்,மழைநீர் அவனது வாழ்வாதாரத்தை பறிக்குமானால் உலகின் எந்த நாட்டிலும் அங்கு எத்தனை தொழிற்நுட்பம் வளர்ந்தும் பயனில்லை.மண்ணிலிருந்து விண்ணுக்கு பலப்பல செயற்கைக்கோள்கள் அனுப்பும் சக்தி வாய்ந்த நாடாக இருந்தாலும்,நாட்டின் உள்கட்டமைப்பு மேம் படுத்தாவிட்டால் அங்கு எத்தனை தொழிற்நுட்பம் இருந்தும் பலனில்லை. நமது தொழிற்நுட்பத்தையும், உள் கட்டமைப்பினையும் சரி செய்து கொள்ள மழை நமக்கு உத்தரவிட்டிருக்கிறது.கீழ்படிந்துதான் ஆகவேண்டும். E.உதயகுமார் நிர்வாக ஆசிரியர்

0 comments:

Post a Comment