Wednesday, 20 February 2013

நல்லாட்சியைத் தருமா உள்ளாட்சிகள்?அக்டோபர்-2011


மக்களுடன் நேரடித்தொடர்பு என்ற வகையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு எப்போதும் ஒரு முக்கியத்துவம் உண்டு.மாநகரங்கள்,நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கான அடிப்படை உள்கட்டமைப்பு வசதி,குடிநீர்,கழிவுநீர்,தெரு விளக்கு,சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதிகள் போன்றவற்றை திறம்பட செயல்படுத்துவதற்காகத்தான் இந்த உள்ளாட்சி அமைப்புகள். ஆனால்,தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகள் துவங்கப்பட்டு இத்தனை ஆண்டுகள் ஆகியும் இவற்றை எல்லாம் முழுமையாக நாம் பெற்றிருக்கிறோமா?அவ்வளவு ஏன் மாநகராட்சி மற்றும் நகராட்சியில் நடைபெறும் கூட்டங்கள் மிகவும் அமைதியாக நடந்து முடிந்தன என்கிற செய்தியையாவது நாம் கேள்விப்பட்டிருக்கிறோமோ?அமர்வதற்காக போடப்பட்ட நாற்காலிகள் வலமும் இடமும்,மேலும் கீழுமாக யார் மேலேயாவது வீசப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன.செருப்புகளும்,மைக்குகளும் கூட எப்போது யார் மீது வீசப்படுமோ என்ற பயம் தொடர்ந்து இருந்து கொண்டுதான் இருக்கிறது. தங்களுடைய உரிமை பிரச்சனையை நிலை நாட்டுவதற்காகவோ,தங்கள் சொந்தப்பிரச்சனைகளை பேசி பெரிதாக்குவதற்காகவோதான் பெரும்பாலும் உள்ளாட்சியமைப்புக் கூட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றிற்கிடையே,மக்களின் வாழ்வாதரங்களை மேம்படுத்தும் நல நோக்கத்துடன் நடத்தப்படும் உண்மையான உள்ளாட்சிக் கூட்டங்களும் இருக்கத்தான் செய்கின்றன என்பதை நாம் மறுக்க முடியாது.ஆனால் நாம் பேசுவது பெரும்பான்மை கூட்டங்கள் பற்றி. மக்கள் தொகையும்,போக்குவரத்தும் பெருகிப்போன இக்காலகட்டத்தில் மற்றுமொரு உள்ளாட்சி தேர்தலை நாம் சந்திக்க இருக்கிறோம்,இச்சூழ்நிலையில் உள்ளாட்சி அமைபுகளின் ஆட்சி செயல்பாடுகளில் அவசியம் வரவேண்டிய மாற்றங்களாக மக்கள் எதிர்பார்ப்பவை ஏராளம் இருக்கின்றன அவற்றில் சில: சாதாரண தூறல் மழைக்கே அடைத்துக்கொள்ளும் கழிவுநீர் வடிகால்களின் நிலைமை மாற வேண்டும்.சாலையோரங்கள் சுத்தம் செய்யப்படாமலே ப்ளீச்சிங் பவுடரை மட்டும் தூவிவிட்டு போகிற பொறுப்பற்ற செயல்கள் மாறவேண்டும்.பச்சிளம் குழந்தைகள் பிறக்கும் மகப்பேறு மருத்துவ மனைகள் நம் மாநிலத்தில் பெரும்பாலும் குப்பைக் கூடங்களாக காட்சியளிக்கும் சீர்கேடுகள் மாற வேண்டும்.திருட்டுக்கு உதவும் எரியாத தெருவிளக்குகள் சரி செய்யப்படவேண்டும். போக்குவரத்திற்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் காலை பத்துமணிக்கு மேல் குப்பைகளையும்,கழிவுகளையும் அகற்றும் மெத்தன ஊழியர்களும்,பொறுப்பற்ற அதிகாரிகளும் மாற வேண்டும்,போக்குவரத்திற்கு உதவும் வகையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாலைகள் அகலமாக்கப்படவேண்டும். இவை எல்லாம் மாறினால் தான் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தலுக்கும் ஒரு உண்மையான அர்த்தம் இருக்கும்.இல்லையெனில்,பொதுத்தேர்தலில் எம்.எல்.ஏ, சீட்டு கேட்டு கிடைக்காதவர்களுக்கு கிடைக்கும் இன்னொரு வாய்ப்பு என்ற அளவிலேயே உள்ளாட்சி பதவிகள் அமைந்து விடக்கூடும். E.உதயகுமார் நிர்வாக ஆசிரியர்

0 comments:

Post a Comment