Wednesday, 20 February 2013

கறுப்பு ஆகஸ்ட் -செப்டம்பர்-2012


வர வர நமது மக்கள் மோசமான கலாசாரத்திற்கும்,நடத்தைகளுக்கும் முன்னுதாரணமாக ஆகிக் கொண்டிருக்கிறார்களோ?என்ற ஐயம் வலுப் பெற்றுக் கொண்டே வருகிறது.கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் நடந்த சில சம்பவக் கோர்வைகளை படித்துப் பார்த்தால்,அது உங்களுக்கே புரியும். ஆதி திராவிடர்கள் பள்ளிக்கு வருவதே பெரும்பாடு.அவர்களும் பள்ளிக்கு வந்து தடையில்லாத கல்வியைப் பெற வேண்டுமென்ற நல்ல நோக்கில் அரசினால் ஆண்டுதோறும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. அந்த எளிய மாணவர்களுக்கு சேர வேண்டிய பணத்தை ஏய்த்து கொள்ளையடித்திருக்கிறார்கள்! அருவெறுப்பான இவர்கள் தலைமையாசிரியர் பதவி வகித்தார்கள் என்பது ஜீரணிக்க முடியாத ஒன்று. நாட்டின் கிரானைட் போன்ற கனிம வளங்களை குறிப்பிட்ட அளவு மட்டும் எடுத்து நாட்டின் உள் நாட்டுத் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும்,உபரி கனிமங்களை அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அதன் மூலம் அந்நிய செலாவணியைப் பெருக்க வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம்.ஆனால் ஒரேயடியாக அரசையும்,மக்களையும் ஏமாற்றி,வரையறை மீறி ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கும் மேலான அரசின் வருமானத்தை 177 கல்குவாரி நிறுவனங்கள்'ஸ்வாகா'செய்திருக்கின்றன.இதற்கு அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் ஆதரவு உண்டு என்பது வெளிப்படைச் செய்தி. நாட்டின் இன்னொரு செல்வமான நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு முறைகேடாக ஒதுக்கியதன் மூலம் ரூ.1,86,000 கோடி இழப்பு ஏற்பட மத்திய அரசின் செயல்பாடுகளே காரணமாக இருந்திருக்கிறதாம். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை ஓவர்டேக் செய்திருக்கிறது நிலக்கரி சுரங்க ஊழல்.பிரதமர் வழக்கம் போல மெளனமாக இருக்கிறார். நம் மாநிலத்திற்கு தேவையான பணியாளர்களைத் தகுதி தேர்வுகள் மூலம் நியமித்துக்கொள்ளும் அமைப்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.இது நடத்திய குரூப் 2 தேர்வின் வினாத்தாள் தேர்வுக்கு முன்பே வெளியாகிவிட்டது.இதனை வாங்குவதற்கு மக்கள் போட்டிப் போட்டுக் கொண்டு இன்டர்நெட் சென்டர்களையும்,லாட்ஜ்களையும் தேடி அலைந்திருக்கிறார்கள்.இலட்சக்கணக்கில் பணம் செலவழித்து வினாத்தாளைப் பெற்றுள்ளார்கள்.நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய இச்சம்பவம் ஒட்டுமொத்த அரசுத் தேர்வு முறையைக் கேலிக் கூத்தாக்கியிருக்கிறது. கடந்த ஆகஸ்டை கறுப்பு ஆகஸ்டாக மாற்றிய ஊழல் சம்பவங்கள் இவை.ஆகஸ்ட் 15 அன்று பிரதமர் கொடியேற்றியதைத் தவிர வேறு எந்த நல்ல விஷயமும் சென்ற மாதத்தில் நடக்கவில்லை என்பது நம்மை உறைய வைக்கும் செய்தி! முதல் மூன்று விஷயங்கள் அரசியல்வாதிகள்,அரசு அதிகாரிகள் ஆகியோர் தொடர்புடையது.ஆனால்,வினாத்தாள் விவகாரத்தில் ஊழல் செய்தது, வேலை தேடும் இளைஞர்கள்.அதாவது மக்கள். ஊழல் அரசியல்வாதிகள்,நேர்மையற்ற அரசு அதிகாரிகள் தன்னொழுக்கம் இல்லாத தறிகெட்ட மக்கள்,இதுதான் இந்தியாவின் அடையாளமாக மாறிக்கொண்டிருக்கிறது.தாங்கள் வாழும் தேசத்தை பாழ்படுத்த நினைக்கும் மனித கூட்டம் பல்கிப் பெருகி வருவது கவலைக்குரியது. ''காக்கை குருவி எங்கள் ஜாதி'' என்று பாரதி என்னமோ பெருமையாகப் பாடியிருக்கலாம்.இதை காக்கை குருவிகள் தற்போது கேட்க நேர்ந்தால்,''நாங்களா உங்கள் ஜாதி?'' என நம்மை காறித்துப்பக் கூடும். ஏனெனில்,எந்த காக்கைக் குருவியும் ஆதிதிராவிட ஏழைக்குழந்தைகளின் கல்வித் தொகையைக் கவர நினைப்பதில்லை. E.உதயகுமார் நிர்வாக ஆசிரியர்

0 comments:

Post a Comment