Wednesday, 20 February 2013

இந்தியா ஆன்மீக பூமி அல்ல!-ஜனவரி-2013


உலகெங்கிலும் உள்ள வெளிநாட்டினர் ஆச்சரியமுடன் பார்க்கும் பல விஷயங்களில் முதன்மையானது நம் நாடு ஓர் 'ஆன்மீக பூமி'என்பது தான் ஆனால்,தற்போதைய காலகட்டத்தில் நம் நாடு மெல்ல மெல்ல 'ஆபாச பூமி' ஆகிக் கொண்டிருக்கிறதோ? என்கிற அச்சம் நம் எல்லோருக்கும் ஏற்படத் துவங்கியிருக்கிறது. டெல்லியில் நடந்த மருத்துவக்கல்லூரி மாணவியின் கற்பழிப்பு சம்பவத்தைத்தான் இந்த தலையங்கம் பீடிகையோடு சொல்ல முயல்கிறது என்று நினைக்க வேண்டாம்.தலைநகரில் நடைபெறும் சம்பவங்கள் மட்டுமே தலைப்புச் செய்தியாக வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. தலைப்புச் செய்தி ஆகாமல்,தவறிப்போய் பெட்டிச் செய்திகளில்,சுருக்கமாகச் சொல்லிவிட்டு தொடராமல் போன எத்தனையோ கற்பழிப்புச் சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதற்கென நாம் ஆண்டுக்கணக்கில் ஏடுகளைப் புரட்டிப் பார்க்க வேண்டாம்,இதோ, கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டுமே செய்தி ஏடுகளில் வந்த தலைப்புச் செய்தி ஆகாமல் போன செய்திகளில் சில- -மகளை ஈவ்டீசிங் செய்த அகாலிதள கட்சிப் பிரமுகர் ராணவைத் தட்டிக்கேட்ட தந்தை கொலை.இடம்:அமிர்தசரஸ் .(டிசம்பர் 6) -பள்ளிக்குச் சென்ற 13வயது மாணவி புனிதா மர்ம நபர்களால் கற்பழித்துக் கொலை. இடம்:தூத்துக்குடி,(டிசம்பர் -21) -இளம் பெண்ணை 7 பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து கற்பழித்ததோடு,மரத்தில் கட்டி வைத்து அடித்து சித்திரவதை.இடம்:திரிபுரா,(டிசம்பர்-23) -4 பேர் கொண்ட கும்பல் இளம்பெண்ணைக் கற்பழித்து வெறியாட்டம்.இடம்:விருத்தாச்சலம்,(டிசம்பர் 24) -7 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞன் கைது.இடம்:புதுக்கோட்டை(டிசம்பர்-24) -9 வயது பள்ளிச் சிறுமியை கடத்தி,மர்ம நபர்கள் கற்பழிக்க முயற்சி.இடம்:உஜ்ஜெயினி(டிசம்பர்-23) -பெண்களுக்கு எதிரான குற்றங்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 36 எம்.எல்.ஏக்கள்,2 எம்,பி.க்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.எந்நேரமும் கைதாகலாம்.(டிசம்பர்-21) -உத்திர பிரதேசம் சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த 26 அமைச்சர்கள் கொலை,கற்பழிப்பு வழக்குகளில் சிக்கியவர்கள்.(டிசம்பர் 23) இவையெல்லாம் உதாரண சம்பவங்கள்தான்.முழுவதையும் சொல்ல வேண்டுமெனில், முழு இதழும் தேவைப்படும். வாழ்க்கை முறையிலும்,நடை உடை பாவனையிலும் நமது நாகரீகம் மேம்பட்டிருக்கிறது என்று சொல்லலாம்.ஆனால்,நமது நடத்தை கற்காலத்தை நோக்கி அதாவது காட்டுமிராண்டித்தனமாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. கட்டுப்பாடில்லாத ஆபாச இணையதளங்கள்,சர்வ சாதாரணமாகக் கிடைக்கும் மது பானங்கள், விலை மலிவாகக் கிடைக்கும் போதைப் பொருட்கள்,யாதொரு தணிக்கையுமின்றி வெளியிடப்படும் ஆபாசத் திரைப்படங்கள்,சரியான வழிகாட்டுதலை செய்ய முயலாத பெற்றோர்கள்,குற்றங்களின் வேர்களைக் கண்டறிந்து களையாத அரசுகள்.இவை எல்லாமும்தான் டெல்லி சம்பவமும், அதே போன்று பல்வேறு சம்பவங்களும் தொடர்ந்து நாடு முழுவதும் நிகழ காரணங்களாகின்றன. எதிர்காலத்தில் இந்தியா வல்லரசு நாடாகும் என்று முழக்கமிடுகிறார் பிரதமர்.வல்லரசு வேண்டாம்.பெண்களை மதிக்கிற,பெண்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கிற நல்லரசு நாடாக இருந்தாலே போதும். அதற்கு இந்த அரசுகள் என்ன செய்யப்போகின்றன.? E.உதயகுமார் நிர்வாக ஆசிரியர்

0 comments:

Post a Comment