Wednesday, 20 February 2013

பாராட்டுக்கு உரியதா பட்ஜெட் ?-ஏப்ரல்-2012


இந்த ஆண்டிற்கான பட்ஜெட்டில் என்னென்ன பொருட்களின் விலை ஏறுமோ?என்று கையைப்பிசைந்துக் கொண்டிருந்த மக்கள் சகஜ நிலைக்கு திரும்பி விட்டார்கள்.வழக்கம் போல கார்கள் மற்றும் ஆடம்பரச் சாதனங்களின் விலையை உயர்த்தியிருக்கிறார்கள்.அதே சமயம் பூட்டுகள்,தீப்பெட்டிகள்,பால் புட்டிகளின் விலைகள் குறைத்துவிட்டோம்(!) என்று கடுப்பேற்றி இருக்கிறார்கள். எலெக்ட்ரிக் பைக்குகளின் விலையும் குறையப் போகிறதாம்.( தமிழ்நாட்டில் எலெக்ட்ரிக் பைக் எத்தனை பேர்(!) வைத்திருக்கிறார்கள்)விலை குறையவேண்டியது இவை மட்டும் தான் என நினைத்து விட்டார்கள் போலும். தமிழக மக்களின் வாழ்க்கை நிலையை சமநிலைப்படுத்தும் அறிவியல் பூர்வமான பட்ஜெட்டை எதிர்பார்த்து இருந்த நமக்கு,இலவசங்களுக்காக மட்டுமே ரூ.22 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று கேட்டதுமே 'புஸ்'என்று ஆகிவிட்டது. தேர்தல் அறிக்கை புத்தகம் போன்று,பட்ஜெட் அறிக்கையை தயார் செய்வது நமது மாநிலத்தில் மட்டும்தான் போலும். என்றாலும்,எந்த ஆண்டு பட்ஜெட்டிலும் இல்லாத அளவிற்கு இம்முறை நமது கட்டுமானத்துறை பக்கம் கருணை காட்டியிருக்கிறார்கள்.குறைந்த, நடுத்தர வருவாய் பிரிவினருக்காக கட்டப்படும் வீடுகளுக்கு தளப்பரப்புக் குறியீடு (FSI) கூடுதல் கட்டணமின்றி அதிகரிக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு நிச்சயம் வீடுகளின் விலையை 10% முதல் 20% வரை குறைக்க வழி செய்யும்.மேலும்,வீட்டு வசதி கூட்டுறவுக் கடன் சங்கங்களில் வீட்டுக்கடன் பெற்றவர்களுக்கு குறிப்பிட்ட அளவு வட்டி தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவித்திருப்பதும் பாராட்டுக்குரியது. அடுத்ததாக,புதிய வழிகாட்டு மதிப்பீடுகள் அமலுக்கு வரும் என தெரிவித்திருக்கிறார்கள்.அதே சமயம்,முத்திரை தாள் கட்டணத்தை 6% லிருந்து 5% ஆக குறைத்திருக்கிறார்கள் மற்றபடி, பொதுப்பணித்துறைக்கும்,நெடுஞ்சாலைத்துறைக்கும் அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்து அசத்தியிருக்கிறார்கள்.இவற்றைப் பாராட்ட 'பில்டர்ஸ் லைன்' கடமைப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த பட்ஜெட் அறிக்கைக்கு நிகராக மக்களைக் கவர்ந்த இன்னொரு விஷயம் 'தொலைநோக்குத்திட்டம்-2023' என்பதுதான்.அடுத்த 10 ஆண்டுகளில்,தமிழக மக்கள் கல்வி,மருத்துவம்,வேலைவாய்ப்பு,குடிநீர்,தொழில்,வேளாண்மை உள்ளிட்ட எல்லாத்துறைகளிலும் ஒட்டு மொத்த வளர்ச்சியைப் பெற இது வழி வகுக்கும் என கூறப்படுகிறது. இந்த திட்டத்தின்படி தமிழ்நாட்டில்'குடிசைகளே இருக்காது','கல்வித்தரம் உயரும்','சாலை போக்குவரத்து சர்வதேசதரத்திற்கு மேம்படும்','தமிழகத்தின் முக்கிய 10 நகரங்கள் உலகத்தரத்திற்கு இணையான வசதிகளை பெறும்' என்றெல்லாம் அதில் பட்டியலிடப்பட்டிருக்கிறது.கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால்,எத்தனையோ,கவர்ச்சிகரமான திட்டங்களை கேட்டு ஏமாந்து போன தமிழக மக்களை,இன்னமும் காத்திருக்கச்செய்யாமல்'தொலைநோக்குத் திட்டம் -2023'-ஐ நடைமுறைப் படுத்துவதற்கான ஆயத்தப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.திட்டப்பணிகளின் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகளை வெளிப்படையாக்க வேண்டும். இல்லையெனில்,இது மக்களுக்கான திட்டம் அல்ல.2023 வரை தனது கட்சி ஆட்சியை நிலைநிறுத்தச் செய்வதற்கான வழிமுறைத் திட்டம் என மக்கள் நினைத்து விடும் அபாயம் ஏற்பட்டுவிடும். E.உதயகுமார் நிர்வாக ஆசிரியர்

0 comments:

Post a Comment