Wednesday, 20 February 2013

நாமாவது வெட்கப்படுவோம்-ஜூலை-2012


நாட்டில் பிரதமர் பதவிக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளாக இராணுவத்துறை,நீதித்துறை மற்றும் உள்துறை ஆகிய பதவிகளைக்குறிப்பிடலாம்.(இதுவரை சிறந்த தலைவர்கள் அந்த பதவிகளில் உட்காரவில்லை என்பது வேறு விஷயம்)இவற்றுள் உள்துறையின் பங்கு முக்கியமானது.நாட்டிற்கு அண்டை நாடுகளுடனான வெளியுறவும்,எல்லைக் காவலும் எத்தனை முக்கியமோ,அத்தனை முக்கியம் உள்துறைக்கும் உண்டு.உள்துறை அமைச்சராக இருப்பது வெறும் உயர்ந்த பதவி மட்டுமல்ல ,ஒரு உன்னதமான பொறுப்பும் கூட.நாட்டில் வசிக்கும் அனைத்து மக்களின் நலனையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் பணி. அந்தப் பணிக்கு புத்திக்கூர்மை,உடனடிச் செயல்வேகம்,பல்வேறு மாநிலங்களின் அரசு அதிகாரிகளைப் பற்றிய அறிவு.மக்களின் வாழ்வு நிலை,கலாச்சாரம்,மதப்பிரிவினை ஆகியவற்றைப் பற்றிய தேர்ந்த ஞானம்,நமது உள்நாட்டு விவகாரங்களில் மூக்கை நுழைக்கும் வெளிநாடுகளின் சக்தியை கண்டறியும் திறன்,இவையெல்லாவற்றையும் விட 100 சதவீத நேர்மை ஆகியன அவசியம் இருக்க வேண்டும். நமது உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களுக்கு இதெல்லாம் இருக்கிறதா?என்று ஆராய்வது நமது தலையங்கத்தின் நோக்கமல்ல. குறைந்தபட்சம் தாம் தேர்ந்தெடுக்கப்பட்ட விதத்தினை பற்றிய விமர்சனங்களும்,ஐயங்களும் எழும் போது,அவற்றை நேர்கொள்வது தான் உள்துறை அமைச்சரின் குறைந்தபட்ச நேர்மையாக இருக்கமுடியும்.தாம் தில்லுமுல்லு செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கை எதிர்கொள்ள அச்சப்பட்டு,பலமுறை காலம் தாழ்த்தி,இறுதியாக இவ்வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று,ப.சிதம்பரம் மனுதாக்கல் செய்திருந்தார்,ஆனால் உயர்நீதிமன்றம்,அவருடைய மனுவை தள்ளுபடி செய்து,'வழக்கை சந்தித்தே தீரவேண்டும்' என்று உத்தரவிட்டிருக்கிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை மோசடி,ஏர்செல் மாக்ஸிஸ் ஒப்பந்த ஊழல்,இவற்றுடன் இப்போது தேர்தல் தில்லுமுல்லு என வரிசையாக குற்றச்சாட்டுகள் ப.சிதம்பரம் மீது இருந்தும் பிரதமர் மௌனமாகத்தான் இருக்கிறார்.ப.சிதம்பரமோ,'15வது லோக்சபாவில் உள்ள உறுப்பினர்கள் மீது இதுபோன்று 111 தேர்தல் வழக்குகள் உள்ளன.இந்நிலையில் நான் மட்டும் ஏன் பதவி விலக வேண்டும்?'' என்று நம்மை திருப்பி கேள்வி கேட்கிறார்.யார் என்ன சொன்னாலும் சரி,தான் ஜெயித்தாலும் தோற்றாலும் சரி,பதவியில் ஒட்டிக்கொள்ள முயலுவதே தனது முதல் பணியாக எண்ணுபவர்தாம் நமது உள்துறை அமைச்சர். அமெரிக்காவில் கடந்த மாதம் 16ம் தேதி லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் ஒபாமா அமைச்சரவையின் வர்த்தகத்துறை அமைச்சராக இருந்த ஜான் பிரைசன் என்பவர் காரை ஓட்டிச் செல்லும் போது அருகில் இருந்த காரின் மீது இடித்துவிட்டுச் சென்றிருக்கிறார்.மறுநாளே பத்திரிகைகளில், 'காரை இடித்துவிட்டு நாகரீகத்திற்காகக் கூட மன்னிப்புக் கேட்காமல் சென்றுவிட்டார் மந்திரி' என்று செய்திகள் வெளியாயின. நம்ம ஊர் மந்தியாக இருந்திருந்தால்,பேப்பரை தூக்கிப் போட்டுவிட்டு சிரித்துக் கொண்டே போயிருப்பார். அமெரிக்க மந்திரியாயிற்றே,அடுத்த நாளே அவமானம் தாங்காமல் இராஜினாமா செய்துவிட்டார். நமது நாகரீகமும்,அரசியலும் உச்சாணிக் கொம்பில் கொடிகட்டிப் பறந்தபோது மனிதர்களே இல்லாத நிலப் பகுதிதான் அமெரிக்கா.ஆனால்,இப்பொழுது அவர்களது அரசியலையும்,நாகரீகத்தையும் பார்த்து நாம் வெட்கப்பட வேண்டி இருக்கிறது. அதற்கு காரணம் நமது தலைவர்கள். E.உதயகுமார்,நிர்வாக ஆசிரியர்

0 comments:

Post a Comment