Wednesday, 20 February 2013

கேட்கவிரும்பும் ஒரே கேள்வி!-ஆகஸ்ட்-2012


1962.தமிழ்நாட்டில் பிறந்த எந்தக் குழைந்தைக்கும் 'அ' ன்னா,'ஆ' வன்னா தெரியாமல் போய்விடக் கூடாது என்று பதைபதைத்த காமராஜரின் ஆட்சிகாலம் அது. அரசு செய்தித் தொடர்புத்துறை அதிகாரிகள் காமராஜரைப் பார்க்க வந்தார்கள். ''ஐயா,இதுவரை நமது ஆட்சியில் செய்து வந்த சாதனைகளை பொது இடங்களிலும், திரை அரங்குகளிலும்,ஒளிபரப்பச் செய்யலாம்.இதன் மூலம் அரசிற்கு நற்பெயர் கிடைக்கும்'' என்றார்கள். காமராஜர் எவ்வளவோ மறுத்தும் அதிகாரிகள் அவரை சம்மதிக்க வைத்தார்கள்.கடைசியில் காமராஜர், ''அதற்கு எத்தனை செலவாகும்?'' என்றார்.அதிகாரிகள் தொகையைச் சொன்னார்கள். தொகையைக் கேட்டதும் காமராஜர்.''அட எழுந்து போங்கய்யா! அத்தனை காசு எங்கிட்ட இருந்தா நாலு பள்ளிக்கூடத்தைக் கட்டுவேன்'' என்றார். தனது சிந்தை,நாடி,நரம்பு,இரத்தம் அனைத்திலும் சேவை என்ற அந்த ஒற்றை வார்த்தை தவிர,வேறு அறியாத அவர் போன்ற தலைவர்கள் தமிழ்நாட்டில் ஏனோ உருவாகவில்லை.கல்வித்தந்தை என நாம் அழைக்கும் அவரது படம் எல்லா அரசு அலுவலகங்களிலும் உண்டு. ஆனால் அரசின் எந்த செயல்பாடுகளிலும் காமராஜரின் வாசமில்லை. அண்மையில் தாம்பரத்தைச் சேர்ந்த பள்ளியில் படிக்கும் 4 வயது சிறுமி,பள்ளியின் பேருந்தில் வீட்டிற்கு திரும்பும்போது,பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக விழுந்து,அதே பேருந்தின் பின்சக்கரத்தில் சிக்கி உயிரிழந்திருக்கிறாள்.சிறுமி இறந்ததைப் பார்த்த பொதுமக்கள் ஓட்டுநரை நையப்புடைத்ததுடன் பேருந்தையும் எரித்திருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட சியோன் பள்ளி முதல்வரைக் கேட்டபோது 'இது எங்களுக்கு சொந்தமான பேருந்தே அல்ல' என்று சொல்லிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்க சென்றுவிட்டார்.தாம்பரம் ஆர்.டி.ஓ.அலுவலரைக் கேட்டால்,'பஸ்ஸில் ஓட்டை இருந்தது என்று யார் சொன்னது?ஓட்டை இருந்தால் நாங்கள் சான்றிதழ் கொடுத்திருக்க மாட்டோமே! என்கிறார்.அப்படியெனில்,எஃப்.சி.பெற்ற ஒரே மாதத்தில் இவ்வளவு பெரிய ஓட்டை திடீரென விழுந்துவிட்டதா? என நமக்குத் தெரியவில்லை.இந்த ஆர்.டி.ஓ.அலுவலரையும்,பள்ளி தாளாளரையும் கூப்பிட்டு வெளுத்து வாங்குவதற்கு பள்ளிக்குழந்தைகளின்பாற் உயிரையே வைத்திருந்த காமராஜர் போன்ற தலைவர்கள் இப்போது இல்லை. இலாப நோக்கு இல்லாத,சேவை மனப்பான்மையோடு செய்யக்கூடிய தொழில்களை அரசு முன்னுரிமை எடுத்துக் கொண்டு நடத்துவதுதான் அனைத்து நாடுகளிலும் மரபு.ஆனால்,நம் நாட்டில் சாராயத்தைக் காய்ச்சி விற்கும் தொழிலை அரசு ஏற்றுக் கொண்டது. வருங்கால சந்ததியினரை உருவாக்க,நம் நாட்டில் இருக்கின்ற ஒரே ஒரு வாய்ப்பான கல்விக் கூடங்கள் தனியார் வசம் வந்துவிட்டது. அதன் விளைவுகளின் ஒரு சிறுதுளி தான் இந்த சிறுமியின் மரணம். நாம் இங்கு யாரையும் தனித்தனியாக பல்வேறு கேள்விக் கணைகளை தொடுக்கப் போவதில்லை. ஒரே ஒரு கேள்விதான் கேட்க விரும்புகிறோம். ஒரு குழந்தை விழக்கூடிய அளவிற்கு ஓட்டை இருந்த பேருந்தை இயக்கிய ஓட்டுநரையும், பேருந்துக் கட்டணம் என்று ஆண்டுதோறும் ஒரு பெரிய தொகையை வாங்கி வைத்துக் கொண்டதோடு அந்தப் பேருந்திற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று,தப்பித்துக்கொள்ள நினைக்கும் அந்த பள்ளி முதல்வரையும்,தனது பேருந்து எந்த நிலையில் இருக்கிறது என்பதைக்கூட அறியாத முதலாளியையும்,நாங்கள் எஃப்.சி வழங்கும் போது அந்த ஓட்டை இல்லை என(பேருந்து எரிந்துவிட்டதால் ஓட்டை தெரியவா போகிறது?)சொல்லும் தாம்பரம் ஆர்.டி.ஓ .அலுவலரையும்,நாம் கேட்க விரும்பும் கேள்வி ஒன்றே ஒன்றுதான். ''இறந்து போன அந்தக் குட்டி தேவதை ஸ்ருதி ஒருவேளை உங்கள் குழந்தையாக இருந்தால் நீங்கள் இந்த பதில் தான் சொல்வீர்களா?'' E.உதயகுமார் நிர்வாக ஆசிரியர்

0 comments:

Post a Comment