Wednesday, 20 February 2013

யாருடைய வசதிக்கு தமிழ்நாடு வீட்டு வசதி!-மே-2011


நகரின் உள்ளேயும்,வெளியேயும் ஆங்காங்கே காலியாக இருக்கும் நிலங்களைக் கையகப்படுத்தி சீரமைத்து அவைகளை வீட்டு மனைகளாகவோ,குடியிருப்புகளாகவோ கட்டி மக்களிடம் ஒப்படைக்கும் பணியை செய்வதுதான் வீட்டு வசதி வாரியம்.தானே நிலம் வாங்கி வீடு கட்ட முடியாதவர்களுக்கும்.பில்டர்களிடம், ஃப்ளாட் வாங்கும் வசதியற்றவர்களுக்கும் தமிழ்நாடு வீட்டு வசதிவாரியம் ஒன்று தான் ஆதரவு. இது "யானை பசிக்கு சோளப் பொரி என்கிற கதையாக இருந்தாலும் அவ்வபோது கிடைக்கும்100,200 வீடுகள் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை குறைந்த அளவிலாவது பூர்த்தி செய்து வருகிறது. முகப்பேர் ஏரித்திட்டத்தில் ஐநூற்றுச்சொச்சத்து வீடுகளை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் விற்க முன் வந்த போது அதற்கு வந்த விண்ணப்பங்கள் ஒன்றரை லட்சத்தைத் தாண்டியது என்பதில் இருந்தே மக்களின் தேவைக்கும், வீட்டு வசதி வாரியத்தின் செயல்பாட்டிற்கும் இடையே உள்ள இடைவெளியை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. இது ஒரு புறம் இருக்க, கட்டப்படும் வீடுகளில் 15 சதவீதம்,அரசின் விருப்புரிமை என்ற திட்டத்தின் மூலம் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. இவை விண்ணப்பதாரரிடம் இருந்து வீடு ஒதுக்கீடு தொடர்பாக விண்ணப்பம் ஏதும் இல்லாமலேயே அரசாங்கத்தின் மூலம் ''வேண்டியவர்களுக்கு'' ஒதுக்கப்படுகிறது 'அரசின் விருப்புரிமை தானே! அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தான் வீடுகளை வழங்குவார்கள்''.என நீங்கள் நினைக்கலாம்.தமிழ்நாட்டு வீட்டு வசதி வாரியத்திடம் இருந்து பொதுமக்கள் வீடு வாங்குவதற்கும் அரசின் விருப்புரிமை திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு பெற்றவர்கள் வீடுகளை வாங்குவதற்கும் வேறுபாடு உள்ளது. பொதுமக்கள் விண்ணப்பிக்கும் போது, குறைந்தபட்சம் ரூ.50,000/-கட்டணம் செலுத்தி பின்னர் அதிர்ஷ்டம் இருந்தால் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டால் மட்டுமே வீடு கிடைக்கும். ஆனால் அரசின் விருப்புரிமை திட்டத்தில் வீடு பெறுபவர்கள் அதிர்ஷ்டம் உடையவர்களே.அவர்கள் பணத்தைக் கொடுத்து வீடு வாங்கிக்கொள்ள வேண்டியதுதான். இதுதான் வேறுபாடே தவிர விலையில் எந்தக் குறைப்பும் இருக்கக் கூடாது.ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக அரசின் விருப்புரிமையின் கீழ் வீடு பெற்றவர்கள் சந்தை மதிப்பை விட மிக குறைந்த விலையில் வீடு மற்றும் மனைகளைப் பெற்றிருக்கின்றனர்.இந்த முறைகேட்டினால் 10,000 கோடி ரூபாய் அளவிற்கு அரசிற்கு இழப்பு ஏற்பட்டிருகிறது. சமூக சேவையாளர்கள் ஒதுக்கீட்டில் நிலம் பெறுவது,பெரிய பெரிய டாக்டர்கள் வக்கீல்கள்,தொழிலதிபர்கள் இவர்கள்தான். இல்லாதவர்களுக்கு ஒரு நீதி, இருப்பவர்களுக்கு ஒரு நீதி என்கிற மனப்பான்மைக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் ஒரு உதாரணமாகாமல் இருக்க வேண்டுமெனில் அது செய்ய வேண்டியது கீழ் கண்டவைதான். 1.தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் திட்டங்களும்,செயல்பாடுகளும் வெளிப்படையாக பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும். 2.வீடு,மனை பெறுவதற்கான குலுக்கல் நியாயமாக, வெளிப்படையாக நடைபெற வேண்டும்,ஒரே நபருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட நிலம்,மனை விற்கக் கூடாது, 3.நகரத்திற்கு உள்ளேயும், வெளியேயும் ஏராளமான பயன்படுத்தப்படாத நிலங்களை வாங்கி, அவற்றில் வீடுகள் கட்டி பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு ஒதுக்கீடு வேண்டும். அல்லது இவற்றை கட்டுநர்களிடம் ஒப்படைத்து பொதுமக்களுக்கு பயன்படும்படி செய்ய வேண்டும். 4.அரசியல் நிர்பந்தங்களுக்கு ஆட்பட்டு அரசின் உயர் பதவியில் இருப்பவர்களுக்கு வீடுகள் போவதை தடுக்க வேண்டும். இதுவரை குறுக்கு வழியில் வீடுகளை பெற்றவர்களிடம் இருந்து வீடுகள் அல்லது நிலங்கள் பறிக்கப் பட வேண்டும். இதெல்லாம் நடைபெறவில்லை என்றால், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் என்பது தனிப்பட்ட சிலரின் ''வசதி'' க்காக ஏற்படுத்தப்பட்ட வாரியமோ என்று பொதுமக்கள் நினைக்கும் அபாயம் இருக்கிறது. E.உதயகுமார் நிர்வாக ஆசிரியர்

0 comments:

Post a Comment