Wednesday, 20 February 2013

நில முழுங்கிகள்-ஆகஸ்ட்-2011


குலசேகர பாண்டியனின் சமஸ்தானத்தில் நடந்த ஒரு சம்பவம்.அண்டை நாட்டு மன்னர்களை பின்னிப் பெடெலெடுத்ததில்,மகிழ்ந்து போன பாண்டியன் தனது படை வீரர்களுக்கு பரிசுகளை வாரி வழங்கினான். அதில் ஒரே ஒரு வீரன் மட்டும்,'நகையும் வேண்டாம்,பணமும் வேண்டாம் நிலமாக கொடுங்கள் என்றான். அதற்கு அரசன்,'எத்தனை காணி நிலம் வேண்டும்?'எனக் கேட்க 'கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலுள்ள நிலத்தை பரிசாக தரும்படி'கேட்டான் வீரன். அவனது பேராசையை புரிந்து கொண்ட மன்னன்,'குத்துமதிப்பாக சொன்னால் எப்படி?உனக்கு எவ்வளவு நிலம் வேண்டுமோ,அது வரைக்கும் ஓடிச்சென்று நமது கொடியை நட்டு விட்டு திரும்பி வா! அத்தனை நிலமும் உனக்கே சொந்தம்'என்றான். வீரன் ஓடினான்..ஓடினான்..பல காணி நிலங்களைக் கடந்தான்,யார் யாருக்கெல்லாம் சொந்தமானதோ அந்த நிலங்களின் மீதெல்லாம் ஓடினான்,ஆறு,மலைகளை கடந்தான்,'இன்னும் கொஞ்சதூரம் ஓடுவோமே! இன்னும் கொஞ்சதூரம் ஓடுவோமே!' என்று ஓடியதில் மன்னனின் எல்லைகளையும் தாண்டி விட்டான். ஏற்கனவே தோற்றுப் போன கடுப்பில் இருந்த எதிரி நாட்டு வீரர்களிடம் அகப்பட்டுக் கொண்டான் பாண்டிய வீரன்.தனியாக மாட்டிய பாண்டிய தேசத்து வீரனை,அவனது கொடியை வைத்து அடையாளம் கண்டு நையப்புடைத்துக் கொன்றனர். நிலப்பேராசைக் கொண்ட எல்லா மனிதர்களுக்கும் இக்கதையை ஒரு பாடமாக சொல்லலாம்.' எவ்வளவுதான் எண்ணெய் பூசி நிலத்தில் புரண்டாலும்,ஓட்டுகிற மண்தான் ஒட்டும்'என்கிற சாதாரண தத்துவம் கூட ஏனோ மனிதர்களுக்குப் புரிவதில்லை! தனக்கு பின் வருகிற எல்லா தலைமுறைகளுக்கும்,எந்த வழியிலாவது சொத்துக்களை சேர்த்து விடத் துடிக்கிறார்கள்.ஆசைகள் பெருகவே,குற்றங்களும் பெருகிவிட்டன. சாதாரண குப்பன்,சுப்பன் என்கிற அளவில் நடைபெற்று வந்த நில மோசடிகள் இப்போது வி.ஐ.பி க்கள் வரை வெகு தாராளமாக நடந்தேறி வருகின்றன.2006-11 காலக்கட்டத்தில்(மட்டும்)நடைபெற்ற நில மோசடிக் குற்றங்களை விசாரிக்க,தனிப்பிரிவு அமைக்கப்பட்ட இரண்டே வாரங்களில் 1449 புகார்கள் பதிவாகி இருக்கின்றன என்கிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் பத்திரம் மற்றும் உரிய ஆவணங்கள் இருந்தும் நிலங்களை நிறைய அப்பாவிகள் பறிகொடுத்திருக்கிறார்கள்.போலிப் பட்டாவைப் பெற்றுக்கொண்டு,பணத்தினை இழந்திருக்கிறார்கள்,ஒரே நிலம்,பல பேருக்கு விற்கப்பட்டு ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். சில காவல்துறை அதிகாரிகள்,சில பத்திரப் பதிவு அதிகாரிகள் ஆசியுடன் அரசியல் ரௌடிகள் மட்டுமல்ல,அமைச்சர்களும்,நிலக்கொள்ளைகளில் ஈடுபட்டிருப்பதைக் கண்டு திகைத்துப் போயிருக்கின்றனர் தமிழக மக்கள். ஜனநாயகத்தின் மீதும்,அரசின் மீதும்,நம்பிக்கை உடைய அப்பாவிகளின் உடைமைகளையும்,சொத்துக்களையும் காப்பதற்கு தான் சட்டம்,அதிகாரிகள்,காவல்துறை போன்றவை இருக்கிறது என இதுவரை நாம் நினைத்தது தவறு போலிருக்கிறது. நிலப் பேராசை கொண்ட பாண்டிய நாட்டு வீரன் போல அடுத்தவர் நிலம் மீதெல்லாம் ஓடி அபகரிக்கும் நில முழுங்கிகளின் விவரம் தற்போது வெளிவர துவங்கி இருக்கிறது.இவர்கள் அத்தனை பேரும்,சற்றும் தாமதிக்கப்படாமல் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.இவர்களை தண்டிக்க இந்த அரசு வெகுகாலம் எடுத்துக் கொள்ள கூடாது .ஏனெனில் 'தாமதமாக வழங்கப்படும் நீதி மறுக்கப்பட்டதற்கு சமம்'. E.உதயகுமார் நிர்வாக ஆசிரியர்

0 comments:

Post a Comment