Tuesday, 30 July 2013

உத்தரகாண்டின் மௌன எச்சரிக்கை!


கடந்த இரு வாரங்களாக எல்லா ஊடகங்களையும் உத்தரகாண்டின்மழை வெள்ளமும், நிலச்சரிவும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.மலை, பள்ளத்தாக்குகளின் இடுக்குகளிலும், மரக்கிளைகளிலும், இரவா? பகலா? எதுவென்று தெரியாமல் கூட்டம் கூட்டமாக ஒதுங்கியிருந்த மக்கள் தங்களை மீட்க எப்போது, யார் வருவார்கள் என்று காலத்தைக் கழித்த கொடுமையான தருணங்களை எல்லா ஊடகங்களும் ஒளிபரப்பு செய்தன. ஏறத்தாழ 1500 கி.மீ. சாலைகளைக் காணவில்லை. 104 பாலங்கள் உருக்குலைந்து போய்விட்டன. 2000 கட்டிடங்கள் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. 700க்கும் மேற்பட்ட கிராமங்கள் ஜலசமாதி அடைந்துவிட்டன. இறந்தவர்கள் 15,000 பேர்களா? அதற்கும் மேலா? முற்ஷூலும் தெரியவில்லை. ஆற்றின் குறுக்கேயும், ஓரமாகவும் ஏராளமான கட்டுமானங்களை உருவாக்கியவர்களுக்குத் தெரியாது இப்படி ஒரு மழையும், மலைச்சுனாமியும் வருமென்று. உண்மையில் உத்தரகாண்டில் பூகோள ரீதியாக இப்படி ஒரு மழை பொழிவதற்கு வாய்ப்பு இல்லை. கடந்த 300 ஆண்டுகளாக எந்த மழை வெள்ளத்தாலும் அடித்துச் செல்லப்படாத ஆதிசங்கரர் சமாதி இப்போது இல்லை என்பதே அதற்கு சாட்சி. இதற்கு மழை மட்டுமே காரணமில்லை. கேதர்நாத்தின் மூன்று பக்கங்களில் மேற்குப்புறம் இருந்த கேதர்டோம் என்கிற பனிச்சிகரம் உடைந்து அருகிலிருந்த சர்பால் ஏரியில் மூழ்கியிருக்கிறது. இப்போது வாய் திறக்கும் இஸ்ரோவும் சரி, உத்தரகாண்ட் மாநில வானிலை மையமும் சரி எந்தவித எச்சரிக்கையையும் விடுக்காது போகவே, கேதர்டோம் பனிச்சிகரம் மெள்ள உருகி தண்ணீரின் மட்டம் உயர்ந்தது. அதனால் அழுத்தம் உண்டாகி, சர்பால் ஏரியை உடைத்து, அதை ஒட்டிய மந்தாகினி ஆற்றில் பேரலைகளை உருவாக்கியதாலேயே கடும் வெள்ளப் பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டிருக்கிறது.இதெல்லாம் ஓரிரு நாட்களில் நடந்து விடவில்லை. ஏறத்தாழ 20 ஆண்டுகளில் நடந்திருக்கிறது. (ஆனால், வெள்ளப்பெருக்கு ஒரே நாளில் ஏற்பட்டிருக்கிறது). இந்த பேரழிவிற்கு தாரிதேவி சிலையை இடம் மாற்றியதே காரணம் என ஒரு பத்திரிகை தலையங்கமே தீட்டியிருந்தது. கேதர்நாத் வெள்ளப்பெருக்கிற்கு இயற்கையும், தாரிதேவியும் ஒருபோதும் காரணமில்லை. கேதர்டோம் பனிச்சிகரம் உருகி ஏன் சர்பால் ஆற்றில் விழுந்தது? இமயமலையில் ஓடும் கங்கா, யமுனா ஆற்றின் துணை ஆறுகளான மந்தாகினி, அலர்நந்தா, பாகீரதி போன்ற துணை ஆறுகளின் போக்கை மாற்றி அங்கு நீர்மின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்காக 20 கி.மீ. தூரத்திற்கு சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.20 ஆண்டுகளாக தொடர்ந்து நதிகளின் போக்கு மாற்றப்பட்டதால் குறிப்பிட்ட மலைச்சிகரத்தின் சீதோஷ்ணநிலை மாறுபட்டு பனிச்சிகரம் உடைந்து விழுந்திருக்கிறது. மலைப் பாங்கான இடங்களில் கட்டுமானங்களை மேற்கொள்ளக் கூடாது என்பதும், அணைக்கட்டு போன்ற நீர்நிலைகளையும் உருவாக்கக் கூடாது என்பதும் விதி. இமயமலை செல்லும் யாத்திரீகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே, ஏராளமான கட்டுமானங்களும், நீர்மின் திட்டங்களும் இயற்கைக்கு முரணாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. கட்டிடங்கள் யாவும் அஸ்திவார பலம் இழந்து ஆற்றில் சரிகிறது என்றால், அதற்கு இயற்கையா காரணம்? ஆற்றங்கரை ஓரத்தில் எந்த ஒரு விதியையும் பின்பற்றாமல் 7 மாடி கட்டிடங்களைக் கட்டுகிற பேராசைதானே காரணம்? இந்த இயற்கை பேரிடர் வெறும் நிகழ்வு அல்ல. இது ஒரு முக்கிய அறிவிப்பு. நீலகிரி, கொடைக்கானல்,ஏற்காடு போன்ற மலை வாசஸ்தலங்களுக்கு உத்தரகாண்டின் ருத்ரதாண்டவம் ஒரு மௌன எச்சரிக்கை. அந்த எச்சரிக்கைக்கு நாம் பயந்தே ஆக வேண்டும். E.உதயகுமார் நிர்வாகஇயக்குனர்

வேண்டாம் ஐ.பி.எல்.போதை!


தற்போதைய சீன பிரதமர் லீகியாங்கின் இந்திய வருகையின்போது தனியார் டிவி நிருபர் ஒருவர் சம்பந்தமில்லாத ஒரு கேள்வியை அவரிடம் கேட்டார். “சீனாவில் இனியாவது கிரிக்கெட் விளையாடப்படுமா?” என்பதுதான் அது. அதற்கு லீகியாங் சொன்ன பதில் “ஒரு போதும் இல்லை. நாங்கள் ஒரு நாளில் சிறு பகுதியைத்தான் விளையாட்டிற்கென எடுத்துக் கொள்வோமே தவிர, ஒரு நாளையே விளையாட்டிற்காக எடுத்துக் கொள்வதில்லை. அதுவும், இங்கு மாதக் கணக்குகளில் கிரிக்கெட் ஆடுவதையும், அதற்காக கோடிக்கணக்கான இளைஞர்கள் தங்கள் நேரத்தை அர்ப்பணிப்பதையும் பார்த்தால் எனக்கு ஆச்சரியமும், பரிதாபமும்தான் ஏற்படுகிறது” என்றார். சீனாவிற்கும், இந்தியாவிற்கும் உள்ள பொருளாதார வளர்ச்சி விகிதத்தைக் கணக்கிட்டால், நம்மால் சீனாவை எட்டிப் பிடிக்க முடியாது என்கிறார்கள். ஒரு வேளை சீனப் பிரதமர் லீகியாங் போன்ற தெளிவான சிந்தனை உடைய சீனத் தலைவர்கள் அதற்குக் காரணமாக இருக்கலாம். சிக்ஸர்களுக்காக எழுந்த இந்திய இளைஞர்களின் கைத்தட்டல்களில் லீகியாங் சொன்ன பதில் ஒருவேளை இந்திய ஊடகங்களில் அமிழ்ந்து போயிருக்கலாம். ஆனால், ஐ.பி.எல் ன் நிஜம் அவ்வப்போது வெளிவந்து கொண்டுதான் இருக்கிறது. ஐ.பி.எல். தொடரைப் பொறுத்தவரை, கலாச்சார சீரழிவு, ஆபாச நடனம், மேட்ச் ஃபிக்ஸிங், ஸ்பாட் ஃபிக்ஸிங் போன்ற அப்பட்டமான விளைவுகளை மட்டுமே நாம் அறிகிறோம். ஐ.பி.எல். தொடர் ஏற்படுத்தும் மறைமுக எதிர்வினைகள் பற்றி நாம் பெரும்பாலும் அறிந்திருப்பதில்லை. ஐ.பி.எல். தொடர் நடைபெறும் இந்த இருமாத காலங்களில் ஈயடிக்கும் வணிகத்துறைகள் ஏராளம். திரையரங்குகள், வணிக வளாகங்கள், கண்காட்சிகள், தீம் பார்க்குகள், நூலகங்கள், அறிவியல் கருத்தரங்குகள் போன்ற எல்லா துறைகளுமே நலிந்து விடுகின்றன. கோடைக்கால விடுமுறையை மாணவர்களை பயனுள்ள வகையில் கழிக்க விடாமல் செய்யும் இந்த ஐ.பி.எல். தொடர் இந்தியாவிலுள்ள கோடிக்கணக்கான இளைஞர்களின் ஆக்கபூர்வமான நேரத்தையும் எடுத்துக் கொள்கிறது. பின்னிரவு வரை நடைபெறும் ஆட்டத்தால் மக்களின் மறுநாளைய பணிகள் சீர் குலைகின்றன. சேலத்தில் ஐ.பி.எல். மேட்சைப் பார்க்க கணவனுக்கும், மெகா சீரியலைப் பார்க்க விரும்பிய மனைவிக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் விரக்தி அடைந்த மனைவி மண்ணெண்ணையை ஊற்றி கொண்டு தீக்குளித்து இறந்து போன செய்தி கூட யாருக்கும் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஒரு சில தனியார் அமைப்புகள் கோடி கோடியாக கொள்ளையடிப்பதற்காக, ஒட்டுமொத்த நாட்டு மக்களையே ஆண்டுதோறும் இரு மாத காலம் ஐ.பி.எல். லுக்கு அடிமையாக்கி சுரண்டுவது அதர்மம் மட்டுமல்ல, சட்டவிரோதமானதும் கூட. சினிமா மற்றும் டாஸ்மாக் போதையில் அகப்படாதிருந்த வெகு சில இளைஞர்கள் கூட இந்த ஐ.பி.எல். போதைக்குள் அகப்பட்டுக்கொண்டிருப்பது நிச்சயம் நாட்டுக்கு நல்லதல்ல. சுவாமி விவேகானந்தரும், டாக்டர் அப்துல்கலாமும் பெருமதிப்பு வைத்திருக்கிற இந்திய இளைஞர்களை குட்டிச்சுவராக்கும் எந்த போதையையும், அது கிரிக்கெட்டாக இருந்தாலும் நாம் அனுமதிக்கக்கூடாது. E.உதயகுமார் நிர்வாகஇயக்குனர்

தாய்மை கலந்த கடமை!


நுண்ணறிவு,நேர்மை, வீரம், அர்ப்பணிப்பு, சமயோசிதம், செயலாற்றும் திறன், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, இவையெல்லாம் காவல் துறையினருக்கு அவசியம் தேவை எனச் சொன்ன அஷூஞர் அண்ணா சொல்லாமல் விடுத்த காவல்துறைக்குத் தேவையான இன்னொரு குணம் தாய்மை. தாய்மைக்கும், கடமைக்கும் என்ன தொடர்பு என கேள்வி கேட்பவர்கள் கீழ்க்கண்ட மூன்று செய்திகளைப் பற்றி படித்தால் நிச்சயம் புரியும். செய்தி ஒன்று: சீனாவில் பூகம்ப பேரிடர் மீட்புப் பணிக்காக ஜியாங் என்ற ஒரு பெண் போலீஸ் அதிகாரியை அனுப்பியிருந்தது அரசு. பிறந்து 6 மாதமே ஆன தனது குழந்தையை வீட்டிலேயே விட்டுவிட்டு பயணமானார் ஜியாங். குழந்தையை விட்டுவிட்டு வந்தாலும், அந்தப் பெண் போலீசின் தாய்மை மட்டும் மாறவில்லை. அங்கு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த எட்டு குழந்தைகளுக்கும் தனது தாய்ப்பால் கொடுத்து காப்பாற்றியிருக்கிறார் ஜியாங். தாய்மை நிறைந்த அந்த பெண் போலீஸ் அதிகாரியை அனைவரும் ‘போலீஸ் அம்மா’ என்று அழைக்கிறார்களாம். செய்தி இரண்டு: இது நடந்தது சென்னையில். மனநிலை சரியில்லாத தனது 20 வயது பெண்ணை அழைத்துக்கொண்டு தலைமைச் செயலகத்திற்கு மனு கொடுக்க வந்திருக்கிறார் ஒரு தாய். அங்கு ஓரிடத்தில் தனது பெண்ணை உட்கார வைத்துவிட்டு, மனு கொடுத்துவிட்டு திரும்புவதற்குள் மனநிலை சரியில்லாத அந்தப் பெண் தனக்கு அருகிலிருந்த பெண் போலீசை தாக்கி விட்டார். இந்த விவரம் தெரிந்து அந்த தாய் பெண் போலீசிடம் மன்னிப்புக் கேட்டதற்கு, அந்தப் பெண் போலீஸ் ‘பரவாயில்லை விடுங்கள், அவர்கள் குழந்தை மாதிரிதானே’ எனப் பெருந்தன்மையோடு அந்தப் பெண் மீது இரக்கம் காட்டியிருக்கிறார். காக்கிச் சட்டைக்குள்ளும் இருக்கும் தாய்மை நிறைந்த இந்த இரு இதயங்களைப் பற்ஷூய செய்திகளைப் படித்தீர்கள் அல்லவா? இனி, 3 வது செய்தி. இது நடந்தது தலைநகருக்கெல்லாம் தலைநகர் டெல்லியில். ஐந்து வயது பெண் குழந்தையை பலாத்காரப்படுத்திய கொடூர குற்றவாளிகளைக் கைது செய்யவும், பாதிக்கப்பட்ட குழந்தைக்கு உரிய நிவாரணமும், நீதி வழங்கவும், ஆயிரக்கணக்கான பெண்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். அவர்களில் ஒரு பெண்ணை துணை கமிக்ஷனர் ஒருவர் கன்னத்தில் அறைந்து வெளியே செல்லும்படி துரத்தியிருக்கிறார். ஒரு குற்றமும் செய்யாத, ஒரு தவறும் செய்யாத, கைகளில் எவ்வித ஆயுதமுமின்றி , யாரோ ஒரு முகம் தெரியாத பெண் குழந்தைக்காக நீதி கேட்கச் சென்று முற்றுகையிட்ட ஒரு இளம் பெண்னை கன்னங்களில் மாறி மாறி அறைந்த அந்த உதவி கமிக்ஷனர் போன்ற இரக்கமற்றவர்களும் காவல்துறையில் உள்ளனர். காக்கிச்சட்டை என்பது தனது வலுவினையும், அதிகாரத்தையும், பொதுமக்கள் மீது பிரயோகிப்பதுதான் என நினைத்துக் கொள்ளும் பல ஆயிரம் போலீசார் நம் நாட்டில் இன்னும் பணிபுரிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் குறைந்தபட்சம் சீனப் பெண் போலீஸ் ஜியாங்கியிட மிருந்தோ அல்லது சென்னை பெண் போலீசிடமிருந்தோ தாய்மை கலந்த கடமையைக் கற்றுக் கொள்ளலாம். ஏனெனில், தாய்மை என்பது பெண்களுக்கு மட்டுமே உரித்தானது அல்ல. சில சமயம் ஆண்களுக்கும் அது தேவையானதுதான். E.உதயகுமார் நிர்வாக இயக்குனர்

Friday, 29 March 2013

கிழக்கிற்கு ஒரு நீதி! மேற்கிற்கு ஒரு நீதி!-ஏப்ரல்-2013


நடந்தது ஒரே விதமான குற்றம் சுட்டது வெளிநாட்டினர் சுடப்பட்டது இந்திய நாட்டின் பிரஜைகள்.ஆனால்,நடுவண் அரசின் ரியாக்சன் வேறு வேறாக இருக்கிறது.இத்தகையதொரு அதிசய நிகழ்வு நம் நாட்டில் மட்டுமே நடக்கும். கேரளக் கடற்கரையோரம் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை இந்திய மீனவர்கள் என்று சொல்லும் வெளியுறவுத்துறை அமைச்சர் குர்ஷித்,தமிழக எல்லையோரம் மீன் பிடிக்கும் மீனவர்களை மட்டும் ஒருமைப்பாட்டு தர்மம் சிறிதும் இன்றி,பிரதேச அடையாள மிட்டு தமிழக மீனவர்கள் என்று தனிமைப்படுத்துகிறார். ''எச்சரிக்கை செய்தும் கப்பலருகே வந்தார்கள் எனவே கடற்கொள்ளையர்கள் என்று தவறாக சுட்டுவிட்டோம்''என்கிற இத்தாலி வீரர்களை வழக்கில் ஆஜராக சுப்ரீம் கோர்ட் உத்தரவிடுகிறது.பாராளுமன்றம் வெகுண்டெழுகிறது.எதிர்க்கட்சிகள் ஆர்ப்பரிக்கின்றன,இத்தாலிய தூதர் தாயகம் போவதற்கு விமான நிலையக் கதவுகள் மூடிக்கொள்கின்றன.சரி நல்ல விஷயம்தான்.இந்திய மீனவர்களுக்கான இத்தகைய கருணை வரவேற்கக்கூடியதுதான். ஆனால்,அதே இந்தியாவில் பிறந்து,தனது வாழ்வாதாரத்தின் குறைந்தபட்ச தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள கடல் அன்னையைத் தவிர வேறு வழியில்லாத 800-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சிங்கள வெறியர்களால் இதுவரைக் கொல்லப்பட்டிருக்கும் போது எந்த வெளியுறவுத்துறை அமைச்சரும் வாயைத் திறக்கவில்லை.இதைப்பற்றி பேச பாராளுமன்றத்தில் யாருக்கும் நேரமுமில்லை. துரதிஷ்டவசமாக,நாம் தேர்ந்தெடுக்கும் தலைவர்களுக்கும் தமிழ்நாட்டின் நலன் இரண்டாம்பட்சமாகவே போய்விடுகிறது என்பதற்கு தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களின் துறைகளே சான்று.தனது மாநிலத்தின் மீனவர்கள் சுடப்பட்ட போது கொதித்தெழுந்த ஏ.கே.அந்தோணியைப் போன்ற மத்திய ராணுவ அமைச்சராகவோ,அதற்கு ஆதரவாய் செயல்படுகிற குர்ஷித் வகித்து வரும் வெளியுறவுத்துறை அமைச்சராகவோ நம் தமிழக அமைச்சர்கள் எவரும் இல்லை என்பது கூட(இதில் என்ன பெரிய வருமானம் வரப் போகிறது?) தமிழக மீனவர்களின் பிரச்சினை முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படாமல் போனதற்குக் காரணம் என்று சொல்லலாம்.மந்திரிகளை விடுங்கள்.தமிழீழம் மற்றும் தமிழக மீனவர்களின் பிரச்சனைக்காக குரல் கொடுக்கும் மாணவர்களின் முனைப்பில் ஒரு சிறு பகுதியைக் கூட நமது முதல்நிலைத் தலைவர்களிடம் நாம் பார்க்கக் காணோம். கூடங்குளம் மின் உற்பத்தி ஒதுக்கீடு,வட மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு மின்சாரம் வருகின்ற மின்தடம்,தமிழ்நாட்டை ஊடுருவிச் செல்லும் கெய்ல் நிறுவனத்தின் சமையல் எரிவாயு குழாய் பதிப்பு என எந்த தேசியத் திட்டத்திலும் தமிழ்நாட்டின் தேசியநலன் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது என்பது உண்மை.கிழக்கிற்கு ஒரு நீதி,மேற்கிற்கு ஒரு நீதி என்று நடந்து கொள்ளும் அரசை எப்படி நடுவண் அரசு என்று அழைப்பது? ஆனால் ஒன்று மட்டும் உறுதி.இத்தனையும் நடந்தபிறகு தமிழகத்தின் நகரம் மற்றும் கிராமங்களின் வீதிகளில் வரும் தேர்தல்களில் வாக்குக்கோரி நடந்து வர காங்கிரசுக்கும் சரி,மற்ற தேசிய கட்சிகளுக்கும் துணிவிருக்காது. E.உதயகுமார்

Sunday, 3 March 2013

விவசாயிகள் அழுகிற தேசமிது! மார்ச்-2013


ஒரு நாட்டு மக்களை குறிப்பாக அடித்தட்டு மக்களை காப்பதற்கும்,அன்றாடம் ஏற்படும் துயரங்களை தீர்ப்பதற்கும் தான் மத்திய மாநில அரசுகள் இயங்குவதாக இந்த ஜனநாயக அமைப்பில் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.ஆனால் அப்படி இல்லையோ?என்ற ஐயங்களை சமீபகால நிகழ்வுகள் நமக்கு காட்டியவண்ணம் இருக்கின்றன. நாட்டு மக்கள் அனைவருக்கும் படி அளந்தாலும்,தாங்கள் உய்வுறுவதற்கு எவ்வித படியும் இல்லாத விவசாய பெருமக்களுக்கு அண்மையில் ஏற்பட்டுவரும் துயரங்கள் ஏராளம் நகரங்களை மேம்படுத்தவும்,நகரங்களை இணைக்கவும்,அரசுகள் எடுக்கும் முயற்சிகளால் தெரிந்தோ தெரியாமலோ கிராமங்கள் நசுக்கப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகள்,ஆறு வழிச்சாலைகளாக உருவாக்கப்பட்டாலும்,நெடுஞ்சாலை மேம்பாலங்கள் அமைக்கப்பட்டாலும்,உயர் மின்னழுத கம்பிகள் அமைக்கப்பட்டாலும்,ரயில்வே ட்ராக்குகள் அகலபடுத்தப்பட்டாலும்,அல்லது புதிதாக உருவாக்கப்பட்டாலும்,முதலில் அத்திட்டங்களுக்கு தங்களது நிலத்தையும்,சொத்துக்களையும் பறிகொடுப்பது விவசாய பெருமக்களே!விவசாயிகளுக்கு மானியங்கள் கொடுக்கிறதோ இல்லையோ துயரங்களை தொடர்ந்து கொடுக்க அரசுகள் தவறுவதே இல்லை. இப்போது கொச்சியிலிருந்து பெங்களூருவுக்கு இயற்கை எரிவாயுவை திரவ வடிவில் குழாய்களின் மூலமாக எடுத்துச் செல்ல GAIL என்கிற அரசு பொதுத்துறை நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது,இந்தக் குழாய்கள் செல்லும் பாதை நமது தமிழகத்தில் 310 கி.மீ.வரை பயணிக்கிறது(கர்நாடகத்தில் 95 கி.மீ.மட்டுமே).வீடுகளுக்கு உருளைகளுக்குப் பதில் குழாய்கள் மூலம் எரிவாயு இணைப்பு கொடுக்கப்படும் இந்த திட்டம் வரவேற்கக் கூடியதுதான். ஆனால்,இவை நெடுஞ்சாலைகளின் ஓரமாகவோ,இரயில்வே ட்ராக்குகளின் ஓரமாகவோ,ஆறுகளின் ஓரமாகவோ கொண்டு செல்லப்படாமல்,அப்பாவி விவசாயப் பெருமக்களின் விவசாய நிலங்களுக்கு ஊடாக ஏன் கொண்டு செல்லப்பட வேண்டும்?என்பது தான் நமது கேள்வி. ஏற்கனவே.உயர் அழுத்த மின் கம்பிகள் அமைக்கும்போது,உயரமான மரங்களை வளர்க்ககூடாது என்றார்கள்.இப்போது எரிவாயு குழாய்களை அமைக்கும் போது வேர்விடும் மரங்களை வளர்க்கக்கூடாது என்கின்றனர்.அது மட்டுமில்லாது,அந்த குழாய்களுக்கு சேதம் ஏற்பட்டாலோ,குழாய்களில் திரவக்கசிவு ஏற்பட்டாலோ நிலத்தின் உரிமையாளர்கள்தான் பொறுப்பாம்.எளிதில் தீ பற்றக்கூடிய ரசாயனம் தனது சொந்த நிலத்திற்கு அடியில் செல்வதை எந்த விவசாயிதான் விரும்புவார்? நிலத்தின் கீழேயும் நெருப்பு(எரிவாயு),நிலத்தின் மேலேயும் நெருப்பு(உயர் அழுத்த மின் கம்பிகள்)தண்ணீரும் கிடைக்கவில்லை,உரம் வாங்கவும் காசில்லை என்று அடுக்கடுக்கான துயரங்களை விவசாயிகளுக்குக் கொடுப்பதுதான் மத்திய அரசின் நோக்கமாக இருக்கிறது.அதற்கு அரசு 'தேசிய நலன்'என்று பெயர் சூட்டினால்,அது ஜனநாயக போக்கிற்கு விரோதமானது. பெண்களும்,விவசாயிகளும் அழுகிற தேசம் உருப்படாது என சாஸ்திரம் சொல்கிறது. அது சரி.நாம் எப்போது சாஸ்திரங்களை மதித்தோம்?. E.உதயகுமார் நிர்வாக ஆசிரியர்

Wednesday, 20 February 2013

'லா'வை மீறும் சவுதாலாக்கள்! பிப்ரவரி-2013


ஒரே வீட்டில் தந்தையும்,மகனும் சிறைக்குச் செல்வது என்பது நமது பாரதத்திற்குப் புதிதல்ல.நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு அப்படித்தான் சிறைக்குச் சென்றார்கள்.அதையும் பெருமையாகக் கருதினார்கள்.அது இந்தியா சுதந்திரம் அடைவதற்கான போராட்டம்.ஆனால்,இன்றும் அப்படி சிறைக்குச் செல்ல துவங்கி இருக்கிறார்கள்.நாட்டு மக்களுக்காக அல்ல;வீட்டு மக்களுக்காக. அரசியல்வாதிகள் ஊழல் செய்வதும்,அது பற்றிய செய்திகள் நாளிதழ்களில் வெளியாவதும்,பின்பு அதை மறந்துவிட்டு வேறு பரபரப்பான செய்திகளுக்குத் தாவுவதும் நமக்கு வாடிக்கையான ஒன்றாகும்.அந்த வரிசையில் இது ஒரு புதிய செய்தி.ஒரு மாஜி முதல்வரின் ஊழல் குற்றம் நிரூபிக்கப்பட்டு,தண்டனையும் கொடுக்கப்பட்டுள்ளது.சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் ஒரு மாஜி முதல்வருக்கு தண்டனை வழங்கப்பட்டிருப்பது என்பது இதுதான் முதல்முறை என்கிறார்கள். ஹரியானா மாநிலத்தில் 1999-2000-வது ஆண்டில் தனக்கு வேண்டியவர்களையும்,லஞ்சம் வாங்கியவர்களையும் ஆசிரியர்களாக நியமனம் செய்ததாக இந்திய தேசிய லோக்தள் கட்சியின் தலைவரும்,ஹரியானா மாநிலத்தின் அப்போதைய முதல்வருமான ஓம் பிரகாஷ் சவுதாலா மீது குற்றம் சாட்டப்பட்டது.குற்றம் நடந்து 13 ஆண்டுகள் கழித்து தண்டனை அறிவிப்பு வெளியாகி உள்ளது.ஆயுள் தண்டனைக்கே அசராத நமது அரசியல்வாதிகளுக்கு,10 ஆண்டு கால சிறை என்பது பக்கத்து நாட்டுக்கு சுற்றுலா செல்வது போலாகும்.இது சவுதாலாவுக்கு மட்டுமல்ல,மக்களுக்கும் நன்கு தெரியும்.பெரும் பணம் செலவழித்து ஆட்சியை பிடிப்பது,ஆட்சிக்கு வந்தவுடன் பன்மடங்கு பணத்தை சுருட்டுவது போன்ற அரசியல்வாதிகளுக்கு பல ஆண்டுகள் கழித்து குறைவான தண்டனை வழங்குவது என்பது நம் வீட்டுக் குழந்தையை மயிலிறகால் அடிப்பது போன்ற எண்ணத்தையே நமக்கு தருகிறது. தாமதமாக வழங்கப்பட்டிருக்கின்ற மற்றும் குற்றத்தின் தன்மைக்கு குறைவாக வழங்கப்பட்டிருக்கின்ற தீர்ப்பு என்ற போதிலும்,ஒரு ஊழல் அரசியல்வாதிக்கு,அதுவும் ஒரு முன்னாள் முதல்வருக்கு வழங்கப்பட்ட முதல் தீர்ப்பு என்பதால் இதை கைதட்டி வரவேற்றுதான் ஆக வேண்டும். போலி நிதி நிறுவனங்கள்,மல்டி-லெவல் வியாபாரங்கள்.தேக்கு மர வளர்ப்பு,ஈமு கோழி வளர்ப்பு என்ற பெயரில் மக்கள் பணத்தை சுருட்டும்'டை'கட்டிய கிரிமினல் பேர்வழிகளுக்கும்,சவுதாலா போன்ற ஊழல்வாதிகளுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக நாம் உணரவில்லை. இந்த முறைகேடுகள் ஹரியானா மாநிலத்தில் மட்டுமல்ல,இந்தியா முழுவதும் பரவியுள்ளது.மாஜிக்களுக்கும்,ஆட்சியாளர்களுக்கும் இது ஒரு எச்சரிக்கை மணியாகும்.ஓம் பிரகாஷ்,அஜய் சிங் சவுதாலாக்கள் போல 'லா'வை மீறும் சவுதாலாக்கள் நாடு முழுவதும் கண்டறியப்பட்டு,விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு காலம் தாழ்த்தாது உடனே கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். தந்தை,மகன் இருவர் மட்டுமல்ல;இன்னும் கொஞ்சம் கிளறிப் பார்த்தால் நாடு முழுக்க நிறைய ஊழல் குடும்பங்கள் சிறைக்குச் செல்ல வேண்டியிருக்கும்.சவுதாலா குடும்பம் ஒரு தொடக்கமே.அதைத் தொடர்ந்து பல்வேறு ஊழல் குடும்பங்களின் சிறையை நோக்கிய அணிவகுப்பைப் பார்க்க யாருக்குத்தான் ஆசையிருக்காது? காத்திருப்போம்! E.உதயகுமார் நிர்வாக ஆசிரியர்

இந்தியா ஆன்மீக பூமி அல்ல!-ஜனவரி-2013


உலகெங்கிலும் உள்ள வெளிநாட்டினர் ஆச்சரியமுடன் பார்க்கும் பல விஷயங்களில் முதன்மையானது நம் நாடு ஓர் 'ஆன்மீக பூமி'என்பது தான் ஆனால்,தற்போதைய காலகட்டத்தில் நம் நாடு மெல்ல மெல்ல 'ஆபாச பூமி' ஆகிக் கொண்டிருக்கிறதோ? என்கிற அச்சம் நம் எல்லோருக்கும் ஏற்படத் துவங்கியிருக்கிறது. டெல்லியில் நடந்த மருத்துவக்கல்லூரி மாணவியின் கற்பழிப்பு சம்பவத்தைத்தான் இந்த தலையங்கம் பீடிகையோடு சொல்ல முயல்கிறது என்று நினைக்க வேண்டாம்.தலைநகரில் நடைபெறும் சம்பவங்கள் மட்டுமே தலைப்புச் செய்தியாக வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. தலைப்புச் செய்தி ஆகாமல்,தவறிப்போய் பெட்டிச் செய்திகளில்,சுருக்கமாகச் சொல்லிவிட்டு தொடராமல் போன எத்தனையோ கற்பழிப்புச் சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதற்கென நாம் ஆண்டுக்கணக்கில் ஏடுகளைப் புரட்டிப் பார்க்க வேண்டாம்,இதோ, கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டுமே செய்தி ஏடுகளில் வந்த தலைப்புச் செய்தி ஆகாமல் போன செய்திகளில் சில- -மகளை ஈவ்டீசிங் செய்த அகாலிதள கட்சிப் பிரமுகர் ராணவைத் தட்டிக்கேட்ட தந்தை கொலை.இடம்:அமிர்தசரஸ் .(டிசம்பர் 6) -பள்ளிக்குச் சென்ற 13வயது மாணவி புனிதா மர்ம நபர்களால் கற்பழித்துக் கொலை. இடம்:தூத்துக்குடி,(டிசம்பர் -21) -இளம் பெண்ணை 7 பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து கற்பழித்ததோடு,மரத்தில் கட்டி வைத்து அடித்து சித்திரவதை.இடம்:திரிபுரா,(டிசம்பர்-23) -4 பேர் கொண்ட கும்பல் இளம்பெண்ணைக் கற்பழித்து வெறியாட்டம்.இடம்:விருத்தாச்சலம்,(டிசம்பர் 24) -7 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞன் கைது.இடம்:புதுக்கோட்டை(டிசம்பர்-24) -9 வயது பள்ளிச் சிறுமியை கடத்தி,மர்ம நபர்கள் கற்பழிக்க முயற்சி.இடம்:உஜ்ஜெயினி(டிசம்பர்-23) -பெண்களுக்கு எதிரான குற்றங்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 36 எம்.எல்.ஏக்கள்,2 எம்,பி.க்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.எந்நேரமும் கைதாகலாம்.(டிசம்பர்-21) -உத்திர பிரதேசம் சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த 26 அமைச்சர்கள் கொலை,கற்பழிப்பு வழக்குகளில் சிக்கியவர்கள்.(டிசம்பர் 23) இவையெல்லாம் உதாரண சம்பவங்கள்தான்.முழுவதையும் சொல்ல வேண்டுமெனில், முழு இதழும் தேவைப்படும். வாழ்க்கை முறையிலும்,நடை உடை பாவனையிலும் நமது நாகரீகம் மேம்பட்டிருக்கிறது என்று சொல்லலாம்.ஆனால்,நமது நடத்தை கற்காலத்தை நோக்கி அதாவது காட்டுமிராண்டித்தனமாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. கட்டுப்பாடில்லாத ஆபாச இணையதளங்கள்,சர்வ சாதாரணமாகக் கிடைக்கும் மது பானங்கள், விலை மலிவாகக் கிடைக்கும் போதைப் பொருட்கள்,யாதொரு தணிக்கையுமின்றி வெளியிடப்படும் ஆபாசத் திரைப்படங்கள்,சரியான வழிகாட்டுதலை செய்ய முயலாத பெற்றோர்கள்,குற்றங்களின் வேர்களைக் கண்டறிந்து களையாத அரசுகள்.இவை எல்லாமும்தான் டெல்லி சம்பவமும், அதே போன்று பல்வேறு சம்பவங்களும் தொடர்ந்து நாடு முழுவதும் நிகழ காரணங்களாகின்றன. எதிர்காலத்தில் இந்தியா வல்லரசு நாடாகும் என்று முழக்கமிடுகிறார் பிரதமர்.வல்லரசு வேண்டாம்.பெண்களை மதிக்கிற,பெண்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கிற நல்லரசு நாடாக இருந்தாலே போதும். அதற்கு இந்த அரசுகள் என்ன செய்யப்போகின்றன.? E.உதயகுமார் நிர்வாக ஆசிரியர்