Friday, 29 March 2013

கிழக்கிற்கு ஒரு நீதி! மேற்கிற்கு ஒரு நீதி!-ஏப்ரல்-2013


நடந்தது ஒரே விதமான குற்றம் சுட்டது வெளிநாட்டினர் சுடப்பட்டது இந்திய நாட்டின் பிரஜைகள்.ஆனால்,நடுவண் அரசின் ரியாக்சன் வேறு வேறாக இருக்கிறது.இத்தகையதொரு அதிசய நிகழ்வு நம் நாட்டில் மட்டுமே நடக்கும். கேரளக் கடற்கரையோரம் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை இந்திய மீனவர்கள் என்று சொல்லும் வெளியுறவுத்துறை அமைச்சர் குர்ஷித்,தமிழக எல்லையோரம் மீன் பிடிக்கும் மீனவர்களை மட்டும் ஒருமைப்பாட்டு தர்மம் சிறிதும் இன்றி,பிரதேச அடையாள மிட்டு தமிழக மீனவர்கள் என்று தனிமைப்படுத்துகிறார். ''எச்சரிக்கை செய்தும் கப்பலருகே வந்தார்கள் எனவே கடற்கொள்ளையர்கள் என்று தவறாக சுட்டுவிட்டோம்''என்கிற இத்தாலி வீரர்களை வழக்கில் ஆஜராக சுப்ரீம் கோர்ட் உத்தரவிடுகிறது.பாராளுமன்றம் வெகுண்டெழுகிறது.எதிர்க்கட்சிகள் ஆர்ப்பரிக்கின்றன,இத்தாலிய தூதர் தாயகம் போவதற்கு விமான நிலையக் கதவுகள் மூடிக்கொள்கின்றன.சரி நல்ல விஷயம்தான்.இந்திய மீனவர்களுக்கான இத்தகைய கருணை வரவேற்கக்கூடியதுதான். ஆனால்,அதே இந்தியாவில் பிறந்து,தனது வாழ்வாதாரத்தின் குறைந்தபட்ச தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள கடல் அன்னையைத் தவிர வேறு வழியில்லாத 800-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சிங்கள வெறியர்களால் இதுவரைக் கொல்லப்பட்டிருக்கும் போது எந்த வெளியுறவுத்துறை அமைச்சரும் வாயைத் திறக்கவில்லை.இதைப்பற்றி பேச பாராளுமன்றத்தில் யாருக்கும் நேரமுமில்லை. துரதிஷ்டவசமாக,நாம் தேர்ந்தெடுக்கும் தலைவர்களுக்கும் தமிழ்நாட்டின் நலன் இரண்டாம்பட்சமாகவே போய்விடுகிறது என்பதற்கு தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களின் துறைகளே சான்று.தனது மாநிலத்தின் மீனவர்கள் சுடப்பட்ட போது கொதித்தெழுந்த ஏ.கே.அந்தோணியைப் போன்ற மத்திய ராணுவ அமைச்சராகவோ,அதற்கு ஆதரவாய் செயல்படுகிற குர்ஷித் வகித்து வரும் வெளியுறவுத்துறை அமைச்சராகவோ நம் தமிழக அமைச்சர்கள் எவரும் இல்லை என்பது கூட(இதில் என்ன பெரிய வருமானம் வரப் போகிறது?) தமிழக மீனவர்களின் பிரச்சினை முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படாமல் போனதற்குக் காரணம் என்று சொல்லலாம்.மந்திரிகளை விடுங்கள்.தமிழீழம் மற்றும் தமிழக மீனவர்களின் பிரச்சனைக்காக குரல் கொடுக்கும் மாணவர்களின் முனைப்பில் ஒரு சிறு பகுதியைக் கூட நமது முதல்நிலைத் தலைவர்களிடம் நாம் பார்க்கக் காணோம். கூடங்குளம் மின் உற்பத்தி ஒதுக்கீடு,வட மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு மின்சாரம் வருகின்ற மின்தடம்,தமிழ்நாட்டை ஊடுருவிச் செல்லும் கெய்ல் நிறுவனத்தின் சமையல் எரிவாயு குழாய் பதிப்பு என எந்த தேசியத் திட்டத்திலும் தமிழ்நாட்டின் தேசியநலன் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது என்பது உண்மை.கிழக்கிற்கு ஒரு நீதி,மேற்கிற்கு ஒரு நீதி என்று நடந்து கொள்ளும் அரசை எப்படி நடுவண் அரசு என்று அழைப்பது? ஆனால் ஒன்று மட்டும் உறுதி.இத்தனையும் நடந்தபிறகு தமிழகத்தின் நகரம் மற்றும் கிராமங்களின் வீதிகளில் வரும் தேர்தல்களில் வாக்குக்கோரி நடந்து வர காங்கிரசுக்கும் சரி,மற்ற தேசிய கட்சிகளுக்கும் துணிவிருக்காது. E.உதயகுமார்

Sunday, 3 March 2013

விவசாயிகள் அழுகிற தேசமிது! மார்ச்-2013


ஒரு நாட்டு மக்களை குறிப்பாக அடித்தட்டு மக்களை காப்பதற்கும்,அன்றாடம் ஏற்படும் துயரங்களை தீர்ப்பதற்கும் தான் மத்திய மாநில அரசுகள் இயங்குவதாக இந்த ஜனநாயக அமைப்பில் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.ஆனால் அப்படி இல்லையோ?என்ற ஐயங்களை சமீபகால நிகழ்வுகள் நமக்கு காட்டியவண்ணம் இருக்கின்றன. நாட்டு மக்கள் அனைவருக்கும் படி அளந்தாலும்,தாங்கள் உய்வுறுவதற்கு எவ்வித படியும் இல்லாத விவசாய பெருமக்களுக்கு அண்மையில் ஏற்பட்டுவரும் துயரங்கள் ஏராளம் நகரங்களை மேம்படுத்தவும்,நகரங்களை இணைக்கவும்,அரசுகள் எடுக்கும் முயற்சிகளால் தெரிந்தோ தெரியாமலோ கிராமங்கள் நசுக்கப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகள்,ஆறு வழிச்சாலைகளாக உருவாக்கப்பட்டாலும்,நெடுஞ்சாலை மேம்பாலங்கள் அமைக்கப்பட்டாலும்,உயர் மின்னழுத கம்பிகள் அமைக்கப்பட்டாலும்,ரயில்வே ட்ராக்குகள் அகலபடுத்தப்பட்டாலும்,அல்லது புதிதாக உருவாக்கப்பட்டாலும்,முதலில் அத்திட்டங்களுக்கு தங்களது நிலத்தையும்,சொத்துக்களையும் பறிகொடுப்பது விவசாய பெருமக்களே!விவசாயிகளுக்கு மானியங்கள் கொடுக்கிறதோ இல்லையோ துயரங்களை தொடர்ந்து கொடுக்க அரசுகள் தவறுவதே இல்லை. இப்போது கொச்சியிலிருந்து பெங்களூருவுக்கு இயற்கை எரிவாயுவை திரவ வடிவில் குழாய்களின் மூலமாக எடுத்துச் செல்ல GAIL என்கிற அரசு பொதுத்துறை நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது,இந்தக் குழாய்கள் செல்லும் பாதை நமது தமிழகத்தில் 310 கி.மீ.வரை பயணிக்கிறது(கர்நாடகத்தில் 95 கி.மீ.மட்டுமே).வீடுகளுக்கு உருளைகளுக்குப் பதில் குழாய்கள் மூலம் எரிவாயு இணைப்பு கொடுக்கப்படும் இந்த திட்டம் வரவேற்கக் கூடியதுதான். ஆனால்,இவை நெடுஞ்சாலைகளின் ஓரமாகவோ,இரயில்வே ட்ராக்குகளின் ஓரமாகவோ,ஆறுகளின் ஓரமாகவோ கொண்டு செல்லப்படாமல்,அப்பாவி விவசாயப் பெருமக்களின் விவசாய நிலங்களுக்கு ஊடாக ஏன் கொண்டு செல்லப்பட வேண்டும்?என்பது தான் நமது கேள்வி. ஏற்கனவே.உயர் அழுத்த மின் கம்பிகள் அமைக்கும்போது,உயரமான மரங்களை வளர்க்ககூடாது என்றார்கள்.இப்போது எரிவாயு குழாய்களை அமைக்கும் போது வேர்விடும் மரங்களை வளர்க்கக்கூடாது என்கின்றனர்.அது மட்டுமில்லாது,அந்த குழாய்களுக்கு சேதம் ஏற்பட்டாலோ,குழாய்களில் திரவக்கசிவு ஏற்பட்டாலோ நிலத்தின் உரிமையாளர்கள்தான் பொறுப்பாம்.எளிதில் தீ பற்றக்கூடிய ரசாயனம் தனது சொந்த நிலத்திற்கு அடியில் செல்வதை எந்த விவசாயிதான் விரும்புவார்? நிலத்தின் கீழேயும் நெருப்பு(எரிவாயு),நிலத்தின் மேலேயும் நெருப்பு(உயர் அழுத்த மின் கம்பிகள்)தண்ணீரும் கிடைக்கவில்லை,உரம் வாங்கவும் காசில்லை என்று அடுக்கடுக்கான துயரங்களை விவசாயிகளுக்குக் கொடுப்பதுதான் மத்திய அரசின் நோக்கமாக இருக்கிறது.அதற்கு அரசு 'தேசிய நலன்'என்று பெயர் சூட்டினால்,அது ஜனநாயக போக்கிற்கு விரோதமானது. பெண்களும்,விவசாயிகளும் அழுகிற தேசம் உருப்படாது என சாஸ்திரம் சொல்கிறது. அது சரி.நாம் எப்போது சாஸ்திரங்களை மதித்தோம்?. E.உதயகுமார் நிர்வாக ஆசிரியர்